
தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
யாவர் அறியார் திருஒற்றி யப்பா அடியேன் யாதறிவேன்
மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே.
புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
இகழேன் எனைநான் ஒற்றியப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை
அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே.
அன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை
இன்றும் அறியார் அன்றியவர் என்றும் அறியார் என்னில்ஒரு
நன்றும் அறியேன் நாயடியேன் நான்எப்படிதான் அறிவேனோ
ஒன்றும் நெறிஏ தொற்றியப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.
ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுத்தேனே.
விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
படுவேன் அல்லேன் நமன்தமரால் பரிவேன் அல்லேன் பரமநினை
விடுவேன் அல்லேன் என்னையும்நீ விடுவாய் அல்லை இனிச்சிறிதும்
கெடுவேன் அல்லேன் சிறியார்சொல் கேட்பேன் அல்லேன் தருமநெறி
அடுவேன் அல்லேன் திருஒற்றி யப்பா உன்றன் அருள்உண்டே.
உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி யப்பா உன்னுடைய
திண்டோள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே.
அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி யப்பாநான்
சிறியேன் எனினும் நினைஅன்றித் தெளியேன் மற்றோர் தேவர்தமை
வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய்வேன்அடியேன்
நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.
கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ
உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே
அடன்ஏர் விடையாய் திருஒற்றி யப்பா உனைநான் அயர்ந்திலனே.
இலனே மற்றோர் துணைசிறிதும் என்னே காமம் எனும்கடலில்
மலனேன் வருந்தக் கண்டிருத்தல் மணியே அருளின் மரபன்றே
அலனே அயலான் அடியேன்நான் ஐயாஒற்றி யப்பாநல்
நலனேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினனே.
நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.



