திருவருட்பா  48. வழிமொழி விண்ணப்பம்

நீல  னேன்கொடும்  பொய்யல  துரையா 
நீசன்  என்பதென்  நெஞ்சறிந்  ததுகாண் 
சால  ஆயினும்  நின்கழல்  அடிக்கே 
சரண்பு  குந்திடில்  தள்ளுதல்  வழக்கோ 
ஆலம்  உண்டநின்  தன்மைமா  றுவதேல் 
அகில  கோடியும்  அழிந்திடும்  அன்றே 
சீல  மேவிய  ஒற்றியம்  பரனே 
தில்லை  அம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
1
கண்ணுன்  மாமணி  யேஅருட்  கரும்பே 
கற்ற  நெஞ்சகம்  கனிந்திடும்  கனியே 
எண்ணுள்  உட்படா  இன்பமே  என்றென் 
றெந்தை  நின்றனை  ஏத்திலன்  எனினும் 
மண்ணுள்  மற்றியான்  வழிவழி  அடியேன் 
மாய  மன்றிதுன்  மனம்அறிந்  ததுவே 
திண்ணம்  ஈந்தருள்  ஒற்றியூர்  அரசே 
தில்லை  அம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
2
நல்லன்  அல்லனான்  ஆயினும்  சிறியேன் 
நான்அ  றிந்ததோ  நாடறிந்  ததுகாண் 
சொல்ல  வாயிலை  ஆயினும்  எனைநீ 
தொழும்பு  கொண்டிடில்  துய்யனும்  ஆவேன் 
வல்ல  உன்கருத்  தறிந்திலேன்  மனமே 
மயங்கு  கின்றதியான்  வாடுகின்  றனன்காண் 
செல்லல்  நீக்கிய  ஒற்றியூர்  அரசே 
தில்லை  அம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
3
இரக்கம்  என்பதென்  னிடத்திலை  எனநீ 
இகழ்தி  யேல்அஃதி  யல்புமற்  றடியேன் 
பரக்க  நின்அருட்  கிரக்கமே  அடைந்தேன் 
பார்த்தி  லாய்கொலோ  பார்த்தனை  எனில்நீ 
கரப்ப  துன்றனக்  கழகன்று  கண்டாய் 
காள  கண்டனே  கங்கைநா  யகனே 
திரக்கண்  நெற்றியாய்  ஒற்றியாய்த்  தில்லைத் 
திருச்சிற்  றம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
4
யாது  நான்பிழை  செய்யினும்  பொறுப்பான் 
எந்தை  எம்மிறை  என்றுவந்  தடைந்தேன் 
தீது  நோக்கிநீ  செயிர்த்திடில்  அடியேன் 
செய்வ  தென்னைநின்  சித்தமிங்  கறியேன் 
போது  போகின்ற  தன்றிஎன்  மாயப் 
புணர்ச்சி  யாதொன்றும்  போகின்ற  திலைகாண் 
சீத  வார்பொழில்  ஒற்றியம்  பரனே 
திருச்சிற்  றம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
5
தாய்க்கும்  தந்தைக்கும்  நிகரும்நின்  இருதாள் 
சார்ந்த  மேலவர்  தமைத்தொழு  தேத்தா 
நாய்க்கும்  நாய்எனும்  பாவியேன்  பிழையை 
நாடி  நல்லருள்  நல்கிடா  திருந்தால் 
ஏய்க்கும்  மால்நிறக்  காலன்வந்  திடும்போ 
தென்கொ  லாம்இந்த  எண்ணம்என்  மனத்தைத் 
தீய்க்கு  தென்செய்வேன்  ஒற்றியம்  சிவனே 
தில்லை  அம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
6
ஆட்டு  கின்றநீ  அறிந்திலை  போலும் 
ஐவர்  பக்கம்நான்  ஆடுகின்  றதனைக் 
காட்டு  கின்றவான்  கடலிடை  எழுந்த 
காள  முண்டஅக்  கருணையை  உலகில் 
நாட்டு  கின்றனை  ஆயில்இக்  கொடிய 
நாய்க்கும்  உன்னருள்  நல்கிட  வேண்டும் 
தீட்டு  கின்றநல்  புகழ்ஒற்றி  அரசே 
திருச்சிற்  றம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
7
உய்ய  ஒன்றிலேன்  பொய்யன்என்  பதனை 
ஒளித்தி  லேன்இந்த  ஒதியனுக்  கருள்நீ 
செய்ய  வேண்டுவ  தின்றெனில்  சிவனே 
செய்வ  தென்னைநான்  திகைப்பதை  அன்றி 
மையல்  நெஞ்சினேன்  ஆயினும்  உன்னை 
மறந்தி  லேன்இது  வஞ்சமும்  அன்றே 
செய்ய  மேனிஎம்  ஒற்றியூர்  வாழ்வே 
திருச்சிற்  றம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
8
வாடு  கின்றனன்  என்றனை  இன்னும் 
வருந்த  வைக்கினும்  மறந்திடேன்  உன்னைப் 
பாடு  கின்றனன்  பாவியேன்  என்னைப் 
பாது  காப்பதுன்  பரம்அது  கண்டாய் 
தேடு  கின்றமால்  நான்முகன்  முதலாம் 
தேவர்  யாவரும்  தெரிவரும்  பொருளே 
சேடு  நின்றநல்  ஒற்றியூர்  வாழ்வே 
திருச்சிற்  றம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
9
சிறியர்  செய்பிழை  பெரியவர்  பொறுக்கும் 
சீல  மென்பதுன்  திருமொழி  அன்றே 
வறிய  னேன்பிழை  யாவையும்  உனது 
மனத்தில்  கொள்ளுதல்  வழக்கல  இனிநீ 
இறையும்  தாழ்க்கலை  அடியனேன்  தன்னை 
ஏன்று  கொண்டருள்  ஈந்திடல்  வேண்டும் 
செறிய  ஓங்கிய  ஒற்றியம்  பரமே 
திருச்சிற்  றம்பலம்  திகழ்ஒளி  விளக்கே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com