திருவருட்பா  54. கொடி விண்ணப்பம்

மாலை  ஒன்றுதோள்  சுந்தரப்  பெருமான் 
மணத்தில்  சென்றவண்  வழக்கிட்ட  தெனவே 
ஓலை  ஒன்றுநீர்  காட்டுதல்  வேண்டாம் 
உவந்து  தொண்டன்என்  றுரைப்பிரேல்  என்னை 
வேலை  ஒன்றல  மிகப்பல  எனினும் 
வெறுப்பி  லாதுளம்  வியந்துசெய்  குவன்காண் 
சோலை  ஒன்றுசீர்  ஒற்றியூர்  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
1
பூதம்  நும்படை  எனினும்நான்  அஞ்சேன் 
புதிய  பாம்பின்பூண்  பூட்டவும்  வெருவேன் 
பேதம்  இன்றிஅம்  பலந்தனில்  தூக்கும் 
பெருமைச்  சேவடி  பிடிக்கவும்  தளரேன் 
ஏதம்  எண்ணிடா  தென்னையும்  தொழும்பன் 
என்று  கொள்விரேல்  எனக்கது  சாலும் 
சூத  ஒண்பொழில்  ஒற்றியூர்  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
2
உப்பி  டாதகூழ்  இடுகினும்  உண்பேன் 
உவந்திவ்  வேலையை  உணர்ந்துசெய்  எனநீர் 
செப்பி  டாமுனம்  தலையினால்  நடந்து 
செய்ய  வல்லன்யான்  செய்யும்அப்  பணிகள் 
தப்பி  டாததில்  தப்பிருந்  தென்னைத் 
தண்டிப்  பீர்எனில்  சலித்துளம்  வெருவேன் 
துப்பி  டாஎனக்  கருள்ஒற்றி  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
3
கூலி  என்பதோர்  அணுத்துணை  யேனும் 
குறித்தி  லேன்அது  கொடுக்கினும்  கொள்ளேன் 
மாலி  னோடயன்  முதலியர்க்  கேவல் 
மறந்தும்  செய்திடேன்  மன்உயிர்ப்  பயிர்க்கே 
ஆலி  அன்னதாம்  தேவரீர்  கடைக்கண் 
அருளை  வேண்டினேன்  அடிமைகொள்  கிற்பீர் 
சூலி  ஓர்புடை  மகிழ்ஒற்றி  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
4
தேர்ந்து  தேடினும்  தேவர்போல்  தலைமைத் 
தேவர்  இல்லைஅத்  தெளிவு  கொண்  டடியேன் 
ஆர்ந்து  நும்அடிக்  கடிமைசெய்  திடப்பேர் 
ஆசை  வைத்துமை  அடுத்தனன்  அடிகேள் 
ஓர்ந்திங்  கென்றனைத்  தொழும்புகொள்  ளீரேல் 
உய்கி  லேன்இஃ  தும்பதம்  காண்க 
சோர்ந்தி  டார்புகழ்  ஒற்றியூர்  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
5
புதியன்  என்றெனைப்  போக்குதி  ரோநீர் 
பூரு  வத்தினும்  பொன்னடிக்  கடிமைப் 
பதிய  வைத்தனன்  ஆயினும்  அந்தப் 
பழங்க  ணக்கினைப்  பார்ப்பதில்  என்னே 
முதியன்  அல்லன்யான்  எப்பணி  விடையும் 
முயன்று  செய்குவேன்  மூர்க்கனும்  அல்லேன் 
துதிய  தோங்கிய  ஒற்றியூர்  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
6
ஒழுக்கம்  இல்லவன்  ஓர்  இடத்  தடிமைக் 
குதவு  வான்கொல்என்  றுன்னுகிற்  பீரேல் 
புழுக்க  நெஞ்சினேன்  உம்முடைச்  சமுகம் 
போந்து  நிற்பனேல்  புண்ணியக்  கனிகள் 
பழுக்க  நின்றிடும்  குணத்தரு  வாவேன் 
பார்த்த  பேரும்அப்  பரிசினர்  ஆவர் 
தொழுக்கன்  என்னையாள்  வீர்ஒற்றி  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
7
பிச்சை  ஏற்றுணும்  பித்தர்என்  றும்மைப் 
பேசு  கின்றவர்  பேச்சினைக்  கேட்டும் 
இச்சை  நிற்கின்ற  தும்மடிக்  கேவல் 
இயற்று  வான்அந்த  இச்சையை  முடிப்பீர் 
செச்சை  மேனியீர்  திருவுளம்  அறியேன் 
சிறிய  னேன்மிகத்  தியங்குகின்  றனன்காண் 
துச்சை  நீக்கினோர்க்  கருள்ஒற்றி  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
8
ஆலம்  உண்டநீர்  இன்னும்அவ்  வானோர்க் 
கமுது  வேண்டிமா  லக்கடல்  கடைய 
ஓல  வெவ்விடம்  வரில்அதை  நீயே 
உண்கென்  றாலும்நும்  உரைப்படி  உண்கேன் 
சாலம்  செய்வது  தகைஅன்று  தருமத் 
தனிப்பொற்  குன்றனீர்  சராசரம்  நடத்தும் 
சூல  பாணியீர்  திருவொற்றி  நகரீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
9
முத்தி  நேர்கிலாத்  தேவர்கள்  தமைநான் 
முந்து  றேன்அவர்  முற்பட  வரினும் 
சுத்தி  யாகிய  சொல்லுடை  அணுக்கத் 
தொண்டர்  தம்முடன்  சூழ்த்திடீர்  எனினும் 
புத்தி  சேர்புறத்  தொண்டர்தம்  முடனே 
பொருந்த  வைக்கினும்  போதும்மற்  றதுவே 
துத்தி  யார்பணி  யீர்ஒற்றி  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
10
என்ன  நான்அடி  யேன்பல  பலகால் 
இயம்பி  நிற்பதிங்  கெம்பெரு  மானீர் 
இன்னும்  என்னைஓர்  தொண்டன்என்  றுளத்தில் 
ஏன்று  கொள்ளிரேல்  இருங்கடற்  புவியோர் 
பன்ன  என்உயிர்  நும்பொருட்  டாகப் 
பாற்றி  நும்மிசைப்  பழிசுமத்  துவல்காண் 
துன்னு  மாதவர்  புகழ்ஒற்றி  உடையீர் 
தூய  மால்விடைத்  துவசத்தி  னீரே. 
11
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com