திருவருட்பா  58. கொடைமட விண்ணப்பம்

நின்போன்ற  தெய்வம்ஒன்  றின்றென  வேதம்  நிகழ்த்தவும்நின் 
பொன்போன்ற  ஞானப்  புதுமலர்த்  தாள்துணைப்  போற்றுகிலேன் 
என்போன்ற  ஏழையர்  யாண்டுளர்  அம்பலத்  தேநடஞ்செய் 
மின்போன்ற  வேணிய  னேஒற்றி  மேவிய  வேதியனே. 
1
வேதிய  னேவெள்ளி  வெற்பிடை  மேவிய  வித்தகனே 
நீதிய  னேமன்றில்  நிட்கள  ஆனந்த  நிர்த்தமிடும் 
ஆதிய  னேஎமை  ஆண்டவ  னேமலை  யாள்மகிழும் 
பாதிய  னேஎம்  பராபர  னேமுக்கட்  பண்ணவனே. 
2
பண்ணவ  னேபசு  பாசத்தை  நீக்கும்  பரம்பரனே 
மண்ணவ  னேனை  மகிழ்ந்தவ  னேமலம்  மாற்றுகின்ற 
விண்ணவ  னேவெள்  விடையவ  னேவெற்றி  மேவுநெற்றிக் 
கண்ணவ  னேஎனைக்  காத்தவ  னேஒற்றிக்  காவலனே. 
3
காவல  னேஅன்று  மாணிக்குப்  பொற்கிழிக்  கட்டவிழ்த்த 
பாவல  னேதொழும்  பாணன்  பரிசுறப்  பாட்டளித்த 
நாவல  னேதில்லை  நாயக  னேகடல்  நஞ்சைஉண்ட 
மாவல  னேமுக்கண்  வானவ  னேஒற்றி  மன்னவனே. 
4
மன்னவ  னேகொன்றை  மாலைய  னேதிரு  மாலயற்கு 
முன்னவ  னேஅன்று  நால்வர்க்கும்  யோக  முறைஅறந்தான் 
சொன்னவ  னேசிவ  னேஒற்றி  மேவிய  தூயவனே 
என்னவ  னேஐயம்  ஏற்பவ  னேஎனை  ஈன்றவனே. 
5
ஈன்றவ  னேஅன்பர்  இன்னுயிர்க்  கின்புறும்  இன்னமுதம் 
போன்றவ  னேசிவ  ஞானிகள்  உள்ளுறும்  புண்ணியனே 
ஆன்றவ  னேஎம  துள்ளும்  புறம்பும்  அறிந்துநின்ற 
சான்றவ  னேசிவ  னேஒற்றி  மேவிய  சங்கரனே. 
6
சங்கர  னேஅர  னேபர  னேநற்  சராசரனே 
கங்கர  னேமதிக்  கண்ணிய  னேநுதல்  கண்ணினனே 
நங்கர  மேவிய  அங்கனி  போன்றருள்  நாயகனே 
செங்கர  னேர்வண  னேஒற்றி  மேவிய  சின்மயனே. 
7
சின்மய  னேஅனல்  செங்கையில்  ஏந்திய  சேவகனே 
நன்மைய  னேமறை  நான்முகன்  மாலுக்கு  நாடரிதாம் 
தன்மைய  னேசிவ  சங்கர  னேஎஞ்  சதாசிவனே 
பொன்மய  னேமுப்  புராந்தக  னேஒற்றிப்  புண்ணியனே. 
8
புண்ணிய  னேஎமைப்  போல்வார்க்கும்  இன்பப்  பொருள்அளிக்கும் 
திண்ணிய  னேநற்  சிவஞான  நெஞ்சில்  தெளிந்தஅருள் 
அண்ணிய  னேகங்கை  ஆறமர்  வேணியில்  ஆர்ந்தமதிக் 
கண்ணிய  னேபற்  பலவாகும்  அண்டங்கள்  கண்டவனே. 
9
கண்டவ  னேசற்றும்  நெஞ்சுரு  காக்கொடுங்  கள்வர்தமை 
விண்டவ  னேகடல்  வேம்படி  பொங்கும்  விடம்அனைத்தும் 
உண்டவ  னேமற்றும்  ஒப்பொன்  றிலாத  உயர்வுதனைக் 
கொண்டவ  னேஒற்றிக்  கோயிலின்  மேவும்  குருபரனே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com