
நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற
விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்
கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.
காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு
முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான்
சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே
என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே.
ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே
கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே
நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே
செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே.
சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே
நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம்
தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே
பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.
புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை
விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும்
உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக்
கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.



