திருவருட்பா  100. பேறடைவு

மணம்புரி  கடிகை  இரண்டரை  எனும்ஓர் 
வரையுள  தாதலால்  மகனே 
எணம்புரிந்  துழலேல்  சவுளம்ஆ  தியசெய் 
தெழில்உறு  மங்கலம்  புனைந்தே 
குணம்புரிந்  தெமது  மகன்எனும்  குறிப்பைக் 
கோலத்தால்  காட்டுக  எனவே 
வணம்புரி  மணிமா  மன்றில்என்  தந்தை 
வாய்மலர்ந்  தருளினர்  மகிழ்ந்தே. 
1
எம்பொருள்  எனும்என்  அன்புடை  மகனே 
இரண்டரைக்  கடிகையில்  உனக்கே 
அம்புவி  வானம்  அறியமெய்  அருளாம் 
அனங்கனை  தனைமணம்  புரிவித் 
தும்பரும்  வியப்ப  உயர்நிலை  தருதும் 
உண்மைஈ  தாதலால்  உலகில் 
வெம்புறு  துயர்தீர்ந்  தணிந்துகொள்  என்றார் 
மெய்ப்பொது  நடத்திறை  யவரே. 
2
அன்புடை  மகனே  மெய்யருள்  திருவை 
அண்டர்கள்  வியப்புற  நினக்கே 
இன்புடை  உரிமை  மணம்புரி  விப்பாம் 
இரண்டரைக்  கடிகையில்  விரைந்தே 
துன்புடை  யவைகள்  முழுவதும்  தவிர்ந்தே 
தூய்மைசேர்  நன்மணக்  கோலம் 
பொன்புடை  விளங்கப்  புனைந்துகொள்  என்றார் 
பொதுநடம்  புரிகின்றார்  தாமே. 
3
ஈதுகேள்  மகனே  மெய்யருள்  திருவை 
இரண்டரைக்  கடிகையில்  நினக்கே 
ஊதியம்  பெறவே  மணம்புரி  விப்பாம் 
உண்மைஈ  தாதலால்  இனிவீண் 
போதுபோக்  காமல்  மங்கலக்  கோலம் 
புனைந்துளம்  மகிழ்கநீ  என்றார் 
தீதுதீர்த்  தென்னை  இளந்தையில்  தானே 
தெருட்டிய  சிற்சபை  யவரே. 
4
விரைந்துகேள்  மகனே  உலகெலாம்  களிக்க 
மெய்யருள்  திருவினை  நினக்கே 
வரைந்துநன்  மணஞ்செய்  தொருபெரு  நிலையில் 
வைத்துவாழ்  விக்கின்றோம்  அதனால் 
இரைந்துளம்  கவலேல்  இரண்டரைக்  கடிகை 
எல்லையுள்  எழில்மணக்  கோலம் 
நிரைந்துறப்  புனைதி  என்றுவாய்  மலர்ந்தார் 
நிருத்தஞ்செய்  ஒருத்தர்உள்  உவந்தே. 
5
களிப்பொடு  மகனே  அருள்ஒளித்  திருவைக் 
கடிகைஓர்  இரண்டரை  அதனில் 
ஒளிப்பிலா  துலகம்  முழுவதும்  அறிய 
உனக்குநன்  மணம்புரி  விப்பாம் 
அளிப்புறு  மகிழ்வால்  மங்கலக்  கோலம் 
அணிபெறப்  புனைகநீ  விரைந்தே 
வெளிப்பட  உரைத்தாம்  என்றனர்  மன்றில் 
விளங்குமெய்ப்  பொருள்இறை  யவரே. 
6
கலங்கிடேல்  மகனே  அருள்ஒளித்  திருவைக் 
களிப்பொடு  மணம்புரி  விப்பாம் 
விலங்கிடேல்  வீணில்  போதுபோக்  காமல் 
விரைந்துநன்  மங்கலக்  கோலம் 
நலங்கொளப்  புனைந்து  மகிழ்கஇவ்  வுலகர் 
நவிலும்அவ்  வுலகவர்  பிறரும் 
இலங்கநின்  மணமே  ஏத்துவர்  என்றார் 
இயலுறு  சிற்சபை  யவரே. 
7
ஐயுறேல்  இதுநம்  ஆணைநம்  மகனே 
அருள்ஒளித்  திருவைநின்  தனக்கே 
மெய்யுறு  மகிழ்வால்  மணம்புரி  விப்பாம் 
விரைந்திரண்  டரைக்கடி  கையிலே 
கையற  வனைத்தும்  தவிர்ந்துநீ  மிகவும் 
களிப்பொடு  மங்கலக்  கோலம் 
வையமும்  வானும்  புகழ்ந்திடப்  புனைக 
என்றனர்  மன்றிறை  யவரே. 
8
தூங்கலை  மகனே  எழுகநீ  விரைந்தே 
தூயநீர்  ஆடுக  துணிந்தே 
பாங்குற  ஓங்கு  மங்கலக்  கோலம் 
பண்பொடு  புனைந்துகொள்  கடிகை 
ஈங்கிரண்  டரையில்  அருள்ஒளித்  திருவை 
எழில்உற  மணம்புரி  விப்பாம் 
ஏங்கலை  இதுநம்  ஆணைகாண்  என்றார் 
இயன்மணி  மன்றிறை  யவரே. 
9
மயங்கிடேல்  மகனே  அருள்ஒளித்  திருவை 
மணம்புரி  விக்கின்றாம்  இதுவே 
வயங்குநல்  தருணக்  காலைகாண்  நீநன் 
மங்கலக்  கோலமே  விளங்க 
இயங்கொளப்  புனைதி  இரண்டரைக்  கடிகை 
எல்லையுள்  என்றுவாய்  மலர்ந்தார் 
சயங்கொள  எனக்கே  தண்ணமு  தளித்த 
தந்தையார்  சிற்சபை  யவரே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com