திருவருட்பா  108. சமாதி வற்புறுத்தல்

ஆய்உரைத்த  அருட்ஜோதி  வருகின்ற 
தருணம்இதே  அறிமின்  என்றே 
வாய்உரைத்த  வார்த்தைஎன்றன்  வார்த்தைகள்என் 
கின்றார்இம்  மனிதர்அந்தோ 
தாய்உரைத்த  திருப்பொதுவில்  நடம்புரிந்தென் 
உளங்கலந்த  தலைவா  இங்கே 
நீஉரைத்த  திருவார்த்தை  எனஅறியார் 
இவர்அறிவின்  நிகழ்ச்சி  என்னே. 
1
இறந்தவர்கள்  பலரும்இங்கே  எழுகின்ற 
தருணம்இதே  என்று  வாய்மை 
அறந்தழைய  உரைக்கின்ற  வார்த்தைகள்என் 
வார்த்தைகள்என்  றறைகின்  றாரால் 
மறந்தசிறி  யேன்உரைக்க  வல்லேனோ 
எல்லாஞ்செய்  வல்லோய்  உன்றன் 
சிறந்ததிரு  வார்த்தைஎனத்  தெரிந்திலர்இம் 
மனிதர்மதித்  திறமை  என்னே. 
2
சோற்றாசை  யொடுகாமச்  சேற்றாசைப் 
படுவாரைத்  துணிந்து  கொல்லக் 
கூற்றாசைப்  படும்எனநான்  கூறுகின்ற 
துண்மையினில்  கொண்டு  நீவீர் 
நேற்றாசைப்  பட்டவருக்  கின்றருள்வார் 
போலும்அன்றி  நினைத்த  வாங்கே 
பேற்றாசைக்  கருள்புரியும்  ஞானசபா 
பதிப்புகழைப்  பேசு  வீரே. 
3
தொண்டாளப்  பணந்தேடுந்  துறையாள 
உலகாளச்  சூழ்ந்த  காமப் 
பெண்டாளத்  திரிகின்ற  பேய்மனத்தீர் 
நும்முயிரைப்  பிடிக்க  நாளைச் 
சண்டாளக்  கூற்றுவரில்  என்புகல்வீர் 
ஞானசபைத்  தலைவன்  உம்மைக் 
கொண்டாளக்  கருதுமினோ  ஆண்டபின்னர் 
இவ்வுலகில்  குலாவு  வீரே. 
4
பிறந்தவரை  நீராட்டிப்  பெருகவளர்த் 
திடுகின்றீர்  பேய  ரேநீர் 
இறந்தவரைச்  சுடுகின்றீர்  எவ்வணஞ்சம் 
மதித்தீரோ  இரவில்  தூங்கி 
மறந்தவரைத்  தீமூட்ட  வல்லீரால் 
நும்மனத்தை  வயிரம்  ஆன 
சிறந்தவரை  எனப்புகழச்  செய்துகொண்டீர் 
ஏன்பிறந்து  திரிகின்  றீரே. 
5
அணங்கெழுபே  ரோசையொடும்  பறையோசை 
பொங்கக்கோ  ரணிகொண்  டந்தோ 
பிணங்கழுவி  எடுத்துப்போய்ச்  சுடுகின்றீர் 
இனிச்சாகும்  பிணங்க  ளேநீர் 
கணங்கழுகுண்  டாலும்ஒரு  பயனுண்டே 
என்னபயன்  கண்டீர்  சுட்டே 
எணங்கெழுசாம்  பலைக்கண்டீர்  அதுபுன்செய் 
எருவுக்கும்  இயலா  தன்றே. 
6
குணம்புதைக்க  உயிரடக்கம்  கொண்டதுசுட் 
டால்அதுதான்  கொலையாம்  என்றே 
வணம்புதைக்க  வேண்டும்என  வாய்தடிக்கச் 
சொல்கின்றேன்  வார்த்தை  கேட்டும் 
பிணம்புதைக்கச்  சம்மதியீர்  பணம்புதைக்கச் 
சம்மதிக்கும்  பேய  ரேநீர் 
எணம்புதைக்கத்  துயில்வார்நும்  பாற்றுயிலற் 
கஞ்சுவரே  இழுதை  யீரே. 
7
கட்டாலும்  கனத்தாலும்  களிக்கின்ற 
பேயுலகீர்  கலைசோர்ந்  தாரைப் 
பொட்டாலும்  துகிலாலும்  புனைவித்துச் 
சுடுகின்றீர்  புதைக்க  நேரீர் 
சுட்டாலும்  சுடுமதுகண்  டுமதுடம்பு 
துடியாதென்  சொல்லீர்  நும்மைத் 
தொட்டாலும்  தோஷமுறும்  விட்டாலும் 
கதியிலைமேல்  சூழ்வீர்  அன்றே. 
8
பரன்அளிக்கும்  தேகம்இது  சுடுவதப 
ராதம்எனப்  பகர்கின்  றேன்நீர் 
சிரம்நெளிக்கச்  சுடுகின்றீர்  செத்தவர்கள் 
பற்பலரும்  சித்த  சாமி 
உரனளிக்க  எழுகின்ற  திருநாள்வந் 
தடுத்தனஈ  துணர்ந்து  நல்லோர் 
வரனளிக்கப்  புதைத்தநிலை  காரோ 
கண்கெட்ட  மாட்டி  னீரே. 
9
புலைத்தொழிலே  புரிகின்றீர்  புண்ணியத்தைக் 
கருங்கடலில்  போக  விட்டீர் 
கொலைத்தொழிலில்  கொடியீர்நீர்  செத்தாரைச் 
சுடுகின்ற  கொடுமை  நோக்கிக் 
கலைத்தொழிலில்  பெரியர்உளம்  கலங்கினர்அக் 
கலக்கம்எலாம்  கடவுள்நீக்கித் 
தலைத்தொழில்செய்  சன்மார்க்கம்  தலைஎடுக்கப் 
புரிகுவதித்  தருணம்  தானே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com