
எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
செயல்எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
வாய்மிகவும் ஊர்வ தாலோ.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.
கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
தம்உயிர்போல் கண்டு ஞானத்
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
பெருநீதி செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
திருவாயால் புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
வார்த்தைகள்என் றறைவ ராலோ.
மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு
பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு
பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்
சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
அண்டஅப் பாபகி ரண்டஅப் பாநஞ் சணிந்தமணி
கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்
ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்
துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.
மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.
மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
போற்றி நின்அருள் போற்றி நின்பொது
போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
போற்றி நின்முடி போற்றி நின்நடு
போற்றி நின்அடி போற்றி போற்றியே.
போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
போற்றி நின்வரம் போற்றி நின்கதி
போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
போற்றி நின்தயை போற்றி நின்கொடை
போற்றி நின்பதம் போற்றி போற்றியே.
போற்று கின்றஎன் புன்மை யாவையும்
பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
காணக் காட்டிய கருத்த போற்றிவன்
கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
அள்ளக் குறையா வள்ளற் பொருளை
அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
ஐயர் திருவடிக் கானந்த மாகப்
பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
செல்வமே நான்பெற்ற சிறப்பே
மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
வாழ்வித்த என்பெரு வாழ்வே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
தேடியும் காண்கிலாச் சிவமே
மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
வள்ளலே தெள்ளிய அமுதே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
புகன்றபோ தாந்த நாதாந்தம்
தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
தத்தினும் தித்திக்கும் தேனே
மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
மாபெருங் கருணையா ரமுதே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
அம்மையே அப்பனே அபயம்.
அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
சோதி அபயம் துணை.
துணைவா அபயம் துயர்அகல என்பால்
அணைவா அபயம் அபயம் - பணைவாய்
வடலா அபயம் வரதா அபயம்
நடநாய காஅபயம் நான்.
நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
ஐயா அபயமப யம்.
அபயம் பதியே அபயம் பரமே
அபயம் சிவமே அபயம் - உபய
பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
விதத்தில் கருணை விளை.
கருணா நிதியே அபயம் கனிந்த
அருணா டகனே அபயம் - மருணாடும்
உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்
பொள்ளற் பிழைகள் பொறுத்து.
இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
பிணக்கறிவீர் புரட்டறிவீர் பிழைசெயவே அறிவீர்
பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.
உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
குழக்கறியே பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
பிணிக்கும் பீடைக்கும் உடலுளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
பணிக்கும் வேலைசெய் துண்டுடுத் தம்பலம் பரவுதற் கிசையீரே.
மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடிஊண் வழங்கில் இங்கே
உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் கவற்றைஎலாம் ஓகோ பேயின்
விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் கொடுத்திழப்பர் என்னே என்னே.
கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக் களிக்கா நின்ற
சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் கணச்சுகமேசொல்லக் கேண்மின்
முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ எமையும்இவ்வா றிடுகஎன்றே.
மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கிடந்தழுது விளைவிற் கேற்பக்
கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா மணித்தேவைத் துதியார் அன்றே.
சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
சிறியவர் சிந்தைமாத் திரமோ
பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
இனிப்பிலே புகுகின்ற திலையே.
பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
நான்செயத் தக்கதே தென்பாள்
செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
தெய்வமே தெய்வமே என்பாள்
வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
விருப்பிலர் என்மிசை என்பாள்
வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
வருந்துவாள் நான்பெற்ற மகளே.
நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் இலைஅதனால் எல்லாம் வல்லோய்
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் அருட்சோதி அளித்துக் காத்தல்
உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.
இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை
வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் பிள்ளைஎன மதித்தி டாயே.
சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.
ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.



