திருவருட்பா  112. மெய்யருள் வியப்பு

எனக்கும்  உனக்கும்  இசைந்த  பொருத்தம்  என்ன  பொருத்த  மோ 
இந்தப்  பொருத்தம்  உலகில்  பிறருக்  கெய்தும்  பொருத்த  மோ. 
1
தனக்கு  நிகரிங்  கில்லா  துயர்ந்த  தம்பம்  ஒன்ற  தே 
தாவிப்  போகப்  போக  நூலின்  தரத்தில்  நின்ற  தே 
கனக்கத்  திகைப்புற்  றங்கே  நானும்  கலங்கி  வருந்த  வே 
கலக்கம்  நீக்கித்  தூக்கி  வைத்தாய்  நிலைபொ  ருந்த  வே. 
எனக்கும்  உனக்கும் 
2
இங்கோர்  மலையின்  நடுவில்  உயர்ந்த  தம்பம்  நணுக  வே 
ஏறிப்  போகப்  போக  நூலின்  இழைபோல்  நுணுக  வே 
அங்கே  திகைத்து  நடுங்கும்  போதென்  நடுக்கம்  நீக்கி  யே 
அதன்மேல்  உயர்ந்த  நிலையில்  வைத்தாய்  அடிமை  ஆக்கி  யே. 
எனக்கும்  உனக்கும் 
3
இரவில்  பெரிய  வெள்ளம்  பரவி  எங்கும்  தயங்க  வே 
யானும்  சிலரும்  படகில்  ஏறி  யேம  யங்க  வே 
விரவில்  தனித்தங்  கென்னை  ஒருகல்  மேட்டில்  ஏற்றி  யே 
விண்ணில்  உயர்ந்த  மாடத்  திருக்க  விதித்தாய்  போற்றி  யே. 
எனக்கும்  உனக்கும் 
4
மேலைப்  பாற்சிவ  கங்கை  என்னுமோர்  தீர்த்தம்  தன்னை  யே 
மேவிப்  படியில்  தவறி  நீரில்  விழுந்த  என்னை  யே 
ஏலத்  துகிலும்  உடம்பும்  நனையா  தெடுத்த  தேஒன்  றோ 
எடுத்தென்  கரத்தில்  பொற்பூண்  அணிந்த  இறைவன்  நீயன்  றோ. 
எனக்கும்  உனக்கும் 
5
என்ன  துடலும்  உயிரும்  பொருளும்  நின்ன  தல்ல  வோ 
எந்தாய்  இதனைப்  பெறுக  எனநான்  இன்று  சொல்ல  வோ 
சின்ன  வயதில்  என்னை  ஆண்ட  திறத்தை  நினைக்கு  தே 
சிந்தை  நினைக்கக்  கண்ர்  பெருக்கி  உடம்பை  நனைக்கு  தே. 
எனக்கும்  உனக்கும் 
6
அப்பா  நின்னை  அன்றி  எங்கும்  அணைப்பார்  இல்லை  யே 
அந்தோ  நின்னை  அன்றி  எங்கும்  அருள்வார்  இல்லை  யே 
எப்பா  லவர்க்கும்  நின்னை  அன்றி  இறைமை  இல்லை  யே 
எனக்கும்  நின்மே  லன்றி  உலகில்  இச்சை  இல்லை  யே. 
எனக்கும்  உனக்கும் 
7
அரசே  உன்னை  அணைக்க  எனக்குள்  ஆசை  பொங்கு  தே 
அணைப்போம்  என்னும்  உண்மை  யால்என்  ஆவி  தங்கு  தே 
விரைசேர்  பாதம்  பிடிக்க  என்கை  விரைந்து  நீளு  தே 
மேவிப்  பிடித்துக்  கொள்ளுந்  தோறும்  உவகை  ஆளு  தே. 
எனக்கும்  உனக்கும் 
8
தனிஎன்  மேல்நீ  வைத்த  தயவு  தாய்க்கும்  இல்லை  யே 
தகும்ஐந்  தொழிலும்  வேண்டுந்  தோறும்  தருதல்  வல்லை  யே 
வினவும்  எனக்கென்  உயிரைப்  பார்க்க  மிகவும்  நல்லை  யே 
மிகவும்  நான்செய்  குற்றம்  குறித்து  விடுவாய்  அல்லை  யே. 
எனக்கும்  உனக்கும் 
9
என்னை  ஆண்ட  வண்ணம்  எண்ணில்  உள்ளம்  உருகு  தே 
என்னை  விழுங்கி  எங்கும்  இன்ப  வெள்ளம்  பெருகு  தே 
உன்ன  உன்ன  மனமும்  உயிரும்  உடம்பும்  இனிக்கு  தே 
உன்னோ  டென்னை  வேறென்  றெண்ணில்  மிகவும்  பனிக்கு  தே. 
எனக்கும்  உனக்கும் 
10
உன்பே  ரருளை  நினைக்குந்  தோறும்  உடம்பு  பொடிக்கு  தே 
உண்டு  பசிதீர்ந்  தாற்போல்  காதல்  மிகவும்  தடிக்கு  தே 
அன்பே  அமையும்  என்ற  பெரியர்  வார்த்தை  போயிற்  றே 
அன்போர்  அணுவும்  இல்லா  எனக்கிங்  கருளல்  ஆயிற்  றே. 
எனக்கும்  உனக்கும் 
11
நினைக்க  நினைக்கத்  தித்திப்  பெனது  நினைவில்  கொடுக்கு  தே 
நின்பால்  அன்றிப்  பிறர்பால்  செல்ல  நெஞ்சம்  நடுக்கு  தே 
எனைத்துன்  பொழித்தாட்  கொண்ட  நின்னை  அன்னை  என்ப  னோ 
எந்தாய்  அன்பி  லேன்நின்  னடிக்கு  முன்னை  அன்ப  னோ. 
எனக்கும்  உனக்கும் 
12
உன்னை  மறக்கில்  எந்தாய்  உயிர்என்  உடம்பில்  வாழு  மோ 
உன்பால்  அன்றிப்  பிறர்பால்  என்றன்  உள்ளம்  சூழு  மோ 
என்னைக்  கொடுக்க  வாங்கிக்  கொண்ட  தென்ன  கருதி  யோ 
எந்தாய்  நின்னைக்  கொடுக்க  என்பால்  இன்று  வருதி  யோ. 
எனக்கும்  உனக்கும் 
13
நெடுநாள்  முயன்றும்  காண்டற்  கரிய  நிலையைக்  காட்டி  யே 
நிறைந்தென்  அகத்தும்  புறத்தும்  சூழ்ந்தாய்  ஒளியை  நாட்டி  யே 
நடுநா  டியநின்  அருளுக்  கென்மேல்  என்ன  நாட்ட  மோ 
நாய்க்குத்  தவிசிட்  டனைநின்  தனக்கிங்  கிதுவோர்  ஆட்ட  மோ. 
எனக்கும்  உனக்கும் 
14
நாகா  திபனும்  அயனும்  மாலும்  நறுமு  றென்ன  வே 
ஞான  அமுதம்  அளித்தாய்  நானும்  உண்டு  துன்ன  வே 
சாகாக்கலையை  எனக்குப்  பயிற்றித்  தந்த  தயவை  யே 
சாற்றற்  கரிது  நினக்கென்  கொடுப்ப  தேதும்  வியவை  யே. 
எனக்கும்  உனக்கும் 
15
யாது  கருதி  என்னை  ஆண்ட  தைய  ஐய  வோ 
யானுன்  அடிப்பொற்  றுணைகட்  குவந்து  தொழும்பு  செய்ய  வோ 
ஓது  கடவுட்  கூட்டம்  அனைத்தும்  அடிமை  அல்ல  வோ 
உடையாய்  அவர்க்குள்  எனையும்  ஒருவன்  என்று  சொல்ல  வோ. 
எனக்கும்  உனக்கும் 
16
தலையும்  காலும்  திரித்து  நோக்கித்  தருக்கி  னேனை  யே 
தாங்கித்  தெரித்த  தயவை  நினைக்கில்  உருக்கு  தூனை  யே 
புலையும்  கொலையும்  தவிர்ந்த  நெறியில்  புனிதர்  மதிக்க  வே 
புகுவித்  தாயை  என்வாய்  துடிப்ப  தேத்தித்  துதிக்க  வே. 
எனக்கும்  உனக்கும் 
17
தாயே  எனக்குத்  தயவு  புரிந்த  தருணத்  தந்தை  யே 
தனியே  நின்னை  நினைக்கக்  கிளர்வ  தெனது  சிந்தை  யே 
நாயேன்  எண்ணம்  அனைத்தும்  முடித்துக்  கொடுத்த  பண்ப  னே 
நான்செய்  தவத்தால்  எனக்குக்  கிடைத்த  நல்ல  நண்ப  னே. 
எனக்கும்  உனக்கும் 
18
ஏறா  நிலையில்  விரைந்து  விரைந்திங்  கென்னை  ஏற்றி  யே 
இறங்கா  திறங்கும்  படிகள்  முழுதும்  எடுத்தாய்  போற்றி  யே 
மாறாக்  கருணை  என்மேல்  வைக்க  வந்த  தென்னை  யோ 
மதியி  லேன்நின்  அருட்குச்  செய்த  தவந்தான்  முன்னை  யோ. 
எனக்கும்  உனக்கும் 
19
இடமும்  வலமும்  இதுவென்  றறியா  திருந்த  என்னை  யே 
எல்லாம்  அறிவித்  தருள்செய்  கருணை  என்னை  என்னை  யே 
நடமும்  நடஞ்செய்  இடமும்  எனக்கு  நன்று  காட்டி  யே 
நாயி  னேனை  வளர்க்கின்  றாய்நல்  லமுதம்  ஊட்டி  யே. 
எனக்கும்  உனக்கும் 
20
விதுவும்  கதிரும்  இதுவென்  றறியும்  விளக்கம்  இன்றி  யே 
விழித்து  மயங்கி  னேன்பால்  பெரிய  கருணை  ஒன்றி  யே 
அதுவும்  அதுவும்  இதுவென்  றெனக்குள்  அறியக்  காட்டி  யே 
அடிய  னேனை  வளர்க்கின்  றாய்நல்  லமுதம்  ஊட்டி  யே. 
எனக்கும்  உனக்கும் 
21
இருளும்  ஒளியும்  வந்த  வகையை  எண்ணி  எண்ணி  யே 
இரவும்  பகலும்  மயங்கி  னேனை  இனிது  நண்ணி  யே 
அருளும்  பொருளும்  கொடுத்து  மயக்கம்  நீக்கிக்  காட்டி  யே 
அன்பால்  என்னை  வளர்க்கின்  றாய்நல்  லமுதம்  ஊட்டி  யே. 
எனக்கும்  உனக்கும் 
22
அண்டத்  தகத்தும்  புறத்தும்  உன்றன்  ஆணை  செல்லு  தே 
அவனே  எல்லாம்  வல்லான்  என்று  மறைகள்  சொல்லு  தே 
பிண்டத்  தகத்தும்  புறத்தும்  நிறைந்த  பெரிய  சோதி  யே 
பேயேன்  அளவில்  விளங்கு  கின்ற  தென்ன  நீதி  யே. 
எனக்கும்  உனக்கும் 
23
கருணா  நிதிநின்  தன்னைக்  காணக்  கண்கள்  துடிக்கு  தே 
காண்போம்  என்று  நினைக்குந்  தோறும்  உடம்பு  பொடிக்கு  தே 
அருள்நா  டகஞ்செய்  பதங்கள்  பாடி  ஆட  விரைவ  தே 
ஆடும்  பொதுவை  நினைக்க  நினைக்க  நெஞ்சம்  கரைவ  தே. 
எனக்கும்  உனக்கும் 
24
அருளார்  சோதி  என்னுள்  விளங்க  அளித்த  காலத்  தே 
அடியேன்  குறைகள்  யாவும்  தவிர்ந்த  திந்த  ஞாலத்  தே 
பொருளாய்  எனையும்  நினைக்க  வந்த  புதுமை  என்னை  யோ 
பொன்னென்  றைய  மதிப்ப  துதவாத்  துரும்பு  தன்னை  யோ. 
எனக்கும்  உனக்கும் 
25
எனக்குள்  நீயும்  உனக்குள்  நானும்இருக்கும்  தன்மை  யே 
இன்று  காட்டிக்  கலக்கம்  தவிர்த்துக்  கொடுத்தாய்  நன்மை  யே 
தனக்குள்  ளதுதன்  தலைவர்க்  குளதென்  றறிஞர்  சொல்வ  தே 
சரியென்  றெண்ணி  எனது  மனது  களித்து  வெல்வ  தே. 
எனக்கும்  உனக்கும் 
26
கருணைப்  பொதுவில்  பெரிய  சோதித்  தருவில்  கனித்த  தே 
கனித்த  பெரிய  தனித்த  கனிஎன்  கருத்துள்  இனித்த  தே 
தருணத்  துண்டு  மகிழ்வுற்  றேன்அம்  மகிழ்ச்சி  சொல்ல  வே 
தனித்துக்  கரைந்த  எனது  கருத்தின்  தரத்த  தல்ல  வே. 
எனக்கும்  உனக்கும் 
27
என்னா  ருயிர்க்குத்  துணைவ  நின்னை  நான்து  திக்க  வே 
என்ன  தவஞ்செய்  தேன்முன்  உலகு  ளோர்ம  திக்க  வே 
பொன்னார்  புயனும்  அயனும்  பிறரும்  பொருந்தல்  அரிய  தே 
புலைய  னேனுக்  களித்த  கருணை  மிகவும்  பெரிய  தே. 
எனக்கும்  உனக்கும் 
28
என்கண்  மணியுள்  இருக்கும்  தலைவ  நின்னைக்  காண  வே 
என்ன  தவஞ்செய்  தேன்முன்  அயனும்  அரியும்  நாண  வே 
புன்கண்  ஒழித்துத்  தெள்ளா  ரமுதம்  புகட்டி  என்னை  யே 
பொருளாய்  எண்ணி  வளர்க்கின்  றாய்நீ  எனக்கோர்  அன்னை  யே. 
எனக்கும்  உனக்கும் 
29
அறிவி  லேன்செய்  குற்றம்  அனைத்தும்  பொறுத்த  தன்றி  யே 
அமுதும்  அளித்தாய்  யார்செய்  வார்கள்  இந்த  நன்றி  யே 
செறிவி  லாத  பொறியும்  மனமும்  செறிந்து  நிற்க  வே 
செய்தாய்  மேலும்  தெரித்தாய்  சாகாக்  கல்வி  கற்க  வே. 
எனக்கும்  உனக்கும் 
30
ஒருநா  ழிகையில்  யோக  நிலையை  உணர்த்தி  மாலை  யே 
யோகப்  பயனை  முழுதும்  அளித்தாய்  மறுநாள்  காலை  யே 
திருநாள்  நிலையும்  தீர்த்த  நிலையும்  தெய்வ  நிலையு  மே 
சிறியேன்  அறியக்  காட்டித்  தெரித்தாய்  வேதக்  கலையு  மே. 
எனக்கும்  உனக்கும் 
31
அண்டப்  பரப்பின்  திறங்கள்  அனைத்தும்அறிய  வேண்டி  யே 
ஆசைப்  பட்ட  தறிந்து  தெரித்தாய்  அறிவைத்  தூண்டி  யே 
பிண்டத்  துயிர்கள்  பொருத்தும்  வகையும்பிண்டம்  தன்னை  யே 
பிரியும்  வகையும்  பிரியா  வகையும்தெரித்தாய்  பின்னை  யே. 
எனக்கும்  உனக்கும் 
32
வேதா  கமங்கள்  புகன்ற  விரிவை  ஒன்றொன்  றாக  வே 
விளங்க  விரைந்து  தெரித்தாய்  பயிலும்  ஆசை  போக  வே 
பூதா  திகளைப்  பொருத்தும்  பகுதிப்  பொருத்தம்  முற்று  மே 
பொய்மை  நீக்கிக்  காணக்  காட்டித்  தெரித்தாய்  மற்று  மே. 
எனக்கும்  உனக்கும் 
33
வள்ளால்  உன்னைப்  பாடப்  பாட  வாய்ம  ணக்கு  தே 
வஞ்ச  வினைகள்  எனைவிட்  டோடித்  தலைவ  ணக்கு  தே 
எள்ளா  துனது  புகழைக்  கேட்கச்  செவிந  யக்கு  தே 
எந்தாய்  தயவை  எண்ணுந்  தோறும்  உளம்வி  யக்கு  தே. 
எனக்கும்  உனக்கும் 
34
இறைவா  நின்னைக்  கனவி  லேனும்  யான்ம  றப்ப  னோ 
எந்தாய்  உலகத்  தவர்கள்  போல்நான்  இனி  இறப்ப  னோ 
மறைவா  சகமும்  பொருளும்  பயனும்  மதிக்கும்  மதியி  லே 
வாய்க்கக்  கருணை  புரிந்து  வைத்தாய்  உயர்ந்த  பதியி  லே. 
எனக்கும்  உனக்கும் 
35
தலைவா  எனக்குக்  கருணை  அமுதம்  தரஇத்  தலத்தி  லே 
தவம்செய்  தேன்அத்  தவமும்  உன்றன்  அருள்வ  லத்தி  லே 
அலைவா  ரிதியில்  துரும்பு  போல  அயனும்  மாலு  மே 
அலைய  எனக்கே  அளிக்கின்  றாய்நீ  மேலும்  மேலு  மே. 
எனக்கும்  உனக்கும் 
36
உடையாய்  எனக்குப்  புரிந்த  தயவை  உன்ன  உன்ன  வே 
உடம்பு  பூரிக்  கின்ற  தொளிர்பொன்  மலைய  தென்ன  வே 
தடையா  தினிஉள்  மூல  மலத்தின்  தடையும்  போயிற்  றே 
சமய  விகற்பம்  எல்லாம்  நீங்கிச்  சமம  தாயிற்  றே. 
எனக்கும்  உனக்கும் 
37
மயங்குந்  தோறும்  உள்ளும்  புறத்தும்  மயக்கம்  நீக்கி  யே 
மகிழ்விக்  கின்றாய்  ஒருகால்  ஊன்றி  ஒருகால்  தூக்கி  யே 
உயங்கு  மலங்கள்  ஐந்தும்  பசையற்  றொழிந்து  வெந்த  தே 
உன்பே  ரருட்பொற்  சோதி  வாய்க்குந்  தருணம்  வந்த  தே. 
எனக்கும்  உனக்கும் 
38
எனக்கும்  நின்னைப்  போல  நுதற்கண்  ஈந்துமதனை  யே 
எரிப்பித்  தாய்பின்  எழுப்பிக்  கொடுத்தாய்  அருவ  மதனை  யே 
சினக்குங்  கூற்றை  உதைப்பித்  தொழித்துச்  சிதைவு  மாற்றி  யே 
தேவர்  கற்பம்  பலவும்  காணச்  செய்தாய்  போற்றி  யே. 
எனக்கும்  உனக்கும் 
39
கள்ளம்  அறியேன்  நின்னால்  கண்ட  காட்சி  ஒன்று  மே 
கருத்தில்  உளது  வேறோர்  விடயம்  காணேன்  என்று  மே 
உள்ள  துரைக்கின்  றேன்நின்  அடிமேல்  ஆணை  முன்னை  யே 
உள்ளே  விளங்கிக்  காண்கின்  றாய்க்கிங்  கொளிப்ப  தென்னை  யே. 
எனக்கும்  உனக்கும் 
40
என்னை  அடிமை  கொண்டாய்  நானும்  நினக்கு  நல்ல  னோ 
எல்லாம்  வல்ல  தலைவ  நினக்கு  நல்லன்  அல்ல  னோ 
முன்னை  வினைகள்  அனைத்தும்  நீக்கி  அமுதம்  ஊட்டி  யே 
மூவர்க்  கரிய  நிலையில்  வைத்தாய்  என்னை  நாட்டி  யே. 
எனக்கும்  உனக்கும் 
41
சோதி  மலையில்  கண்டேன்  நின்னைக்  கண்க  ளிக்க  வே 
துய்த்தேன்  அமுதம்  அகத்தும்  புறத்தும்  பரிம  ளிக்க  வே 
ஓதி  உணர்தற்  கரிய  பெரிய  உணர்வை  நண்ணி  யே 
ஓதா  தனைத்தும்உணர்கின்றேன்நின்  அருளை  எண்ணி  யே. 
எனக்கும்  உனக்கும் 
42
ஏழு  நிலைகள்  ஓங்கும்  தெய்வ  மாடம்  ஒன்றி  லே 
ஏற்றிக்  களிக்க  வைத்தாய்  அதன்மேல்  இலங்கு  குன்றி  லே 
வாழும்  பரிசு  கவிக்கும்  குடையும்  மதிக்கும்  தூசு  மே 
மகிழ்ந்து  கொடுத்துப்  பின்னும்  கொடுத்தாய்  மணிப்பொற்  காசு  மே. 
எனக்கும்  உனக்கும் 
43
இந்த  உலகில்  உள்ளார்  பலரும்  மிகவும்  நன்மை  யே 
என்பால்  செய்ய  வைத்தாய்  இதுநின்  அருளின்  தன்மை  யே 
அந்த  உலகில்  உள்ளார்  பலரும்  என்னை  நோக்கி  யே 
அப்பா  வாழி  எனவும்  புரிந்தாய்  அடிமை  யாக்கி  யே. 
எனக்கும்  உனக்கும் 
44
அழியாக்  கருணை  அமுத  வடிவின்  ஓங்கும்  சோதி  யே 
அரசே  எனக்குள்  விளங்கும்  ஆதி  யாம்அ  னாதி  யே 
ஒழியாத்  துயரை  ஒழித்த  பெரிய  கருணை  யாள  னே 
ஒன்றாய்  ஒன்றில்  உபய  மாகி  ஒளிரும்  தாள  னே. 
எனக்கும்  உனக்கும் 
45
பாலும்  தேனும்  கலந்த  தென்ன  என்னுள்  இனிக்க  வே 
பரம  ஞான  அமுதம்  அளிக்கின்  றாய்த  னிக்க  வே 
ஏலும்  உயிர்கள்  எல்லாம்  நினக்குப்  பொதுவ  தென்ப  ரே 
இன்று  நோக்கி  ஓர  வாரன்  என்பர்  அன்ப  ரே. 
எனக்கும்  உனக்கும் 
46
ஐயா  நான்செய்  பிழைகள்  ஏழு  கடலில்  பெரிய  தே 
அனைத்தும்  பொறுத்த  தயவு  பிறருக்  கரிய  தரிய  தே 
மெய்யா  நீசெய்  உதவி  ஒருகைம்  மாறு  வேண்டு  மே 
வேண்டா  தென்ன  அறிந்தும்  எனக்குள்  ஆசை  தூண்டு  மே. 
எனக்கும்  உனக்கும் 
47
பூத  வெளியின்  நடமும்  பகுதி  வெளியின்  ஆட்ட  மும் 
போக  வெளியில்  கூத்தும்  யோக  வெளியுள்  ஆட்ட  மும் 
நாத  வெளியில்  குனிப்பும்  பரம  நாத  நடமு  மே 
நன்று  காட்டிக்  கொடுத்தாய்  என்றும்  நலியாத்  திடமு  மே. 
எனக்கும்  உனக்கும் 
48
எட்டும்  இரண்டும்இதுஎன்  றெனக்குச்  சுட்டிக்  காட்டி  யே 
எட்டா  நிலையில்  இருக்கப்  புரிந்தாய்  இட்டுக்  கூட்டி  யே 
துட்ட  வினையைத்  தீர்த்து  ஞானச்  சுடருள்  ளேற்றி  யே 
தூண்டா  தென்றும்  விளங்க  வைத்தாய்  உண்மை  சாற்றி  யே. 
எனக்கும்  உனக்கும் 
49
அருளாம்  பெரிய  வெளிக்குள்  சோதி  வடிவ  னாகி  யே 
அரசு  செலுத்தும்  தனித்த  தலைமைப்  பரம  யோகி  யே 
பொருளாய்  எனையும்  உளங்கொண்  டளித்த  புனித  நாத  னே 
போற்று  நாத  முடிவில்  நடஞ்செய்  கமல  பாத  னே. 
எனக்கும்  உனக்கும் 
50
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com