திருவருட்பா  45. அருள் திறத்து அலைசல்

நறைமணக்கும்  கொன்றை  நதிச்சடில  நாயகனே 
கறைமணக்கும்  திருநீல  கண்டப்  பெருமானே 
உறைமணக்கும்  பூம்பொழில்சூழ்  ஒற்றியப்பா  உன்னுடைய 
மறைமணக்கும்  திருஅடியை  வாய்நிரம்ப  வாழ்த்தேனோ. 
1
அலைவளைக்கும்  பாற்கடலான்  அம்புயத்தான்  வாழ்த்திநிதம் 
தலைவளைக்கும்  செங்கமலத்  தாளுடையாய்  ஆளுடையாய் 
உலைவளைக்கா  முத்தலைவேல்  ஒற்றியப்பா  உன்னுடைய 
மலைவளைக்கும்  கைம்மலரின்  வண்மைதனை  வாழ்த்தேனோ. 
2
ஆறடுத்துச்  சென்றஎங்கள்  அப்பருக்கா  அன்றுகட்டுச் 
சோறெடுத்துச்  சென்ற  துணையே  சுயஞ்சுடரே 
ஊறெடுத்தோர்  காணரிய  ஒற்றியப்பா  உன்னுடைய 
நீறடுத்த  எண்தோள்  நிலைமைதனைப்  பாரேனோ. 
3
சைவத்  தலைவர்  தவத்தோர்கள்  தம்பெருமான் 
மெய்வைத்த  உள்ளம்  விரவிநின்ற  வித்தகனே 
உய்வைத்த  உத்தமனே  ஒற்றியப்பா  உன்னுடைய 
தெய்வப்  புகழ்என்  செவிநிறையக்  கேளேனோ. 
4
பாடுகின்றோர்  பாடப்  பரிசளிக்கும்  புண்ணியனே 
தேடுகின்றோர்  தேடநிற்கும்  தியாகப்  பெருமானே 
ஊடுகின்றோர்  இல்லாத  ஒற்றியப்பா  அம்பலத்துள் 
ஆடுகின்ற  சேவடிகண்  டல்லல்எலாம்  தீரேனோ. 
5
பூணாக  மாடப்  பொதுநடிக்கும்  புண்ணியனே 
சேணாகம்  வாங்கும்  சிவனே  கடல்விடத்தை 
ஊணாக  உள்ளுவந்த  ஒற்றியப்பா  மால்அயனும் 
காணாத  நின்உருவைக்  கண்டு  களியேனோ. 
6
கொள்ளுவார்  கொள்ளும்  குலமணியே  மால்அயனும் 
துள்ளுவார்  துள்அடக்கும்  தோன்றலே  சூழ்ந்துநிதம் 
உள்ளுவார்  உள்உறையும்  ஒற்றியப்பா  உன்னுடைய 
தெள்ளுவார்  பூங்கழற்கென்  சிந்தைவைத்து  நில்லேனோ. 
7
செவ்வண்ண  மேனித்  திருநீற்றுப்  பேரழகா 
எவ்வண்ணம்  நின்வண்ணம்  என்றறிதற்  கொண்ணாதாய் 
உவ்வண்ணன்  ஏத்துகின்ற  ஒற்றியப்பா  உன்வடிவம் 
இவ்வண்ணம்  என்றென்  இதயத்  தெழுதேனோ. 
8
மன்றுடையாய்  மால்அயனும்  மற்றும்உள  வானவரும் 
குன்றுடையாய்  என்னக்  குறைதவிர்த்த  கோமானே 
ஒன்றுடையாய்  ஊர்விடையாய்  ஒற்றியப்பா  என்னுடைய 
வன்றுடையாய்  என்றுன்  மலரடியைப்  போற்றேனோ. 
9
குற்றம்  செயினும்  குணமாகக்  கொண்டருளும் 
நற்றவர்தம்  உள்ளம்  நடுநின்ற  நம்பரனே 
உற்றவர்தம்  நற்றுணைவா  ஒற்றியப்பா  என்கருத்து 
முற்றிடநின்  சந்நிதியின்  முன்நின்று  வாழ்த்தேனோ. 
10
வஞ்ச  மடவார்  மயக்கும்  மயக்கொழிய 
நஞ்சம்அணி  கண்டத்து  நாதனே  என்றென்று 
உஞ்சவர்கள்  வாழ்த்துகின்ற  ஒற்றியப்பா  உன்னுடைய 
கஞ்ச  மலர்அடிக்கே  காதலுற்றுப்  போற்றேனோ. 
11
இன்னல்  உலக  இருள்நடையில்  நாள்தோறும் 
துன்னவரும்  நெஞ்சத்  துடுக்கழிய  நல்லோர்கள் 
உன்னல்உறும்  தெள்ளமுதே  ஒற்றியப்பா  என்வாய்உன் 
தன்அடைவே  பாடித்  தழும்பேறக்  காணேனோ. 
12
பெண்மணியே  என்றுலகில்  பேதையரைப்  பேசாதென் 
கண்மணியே  கற்பகமே  கண்ணுதலில்  கொள்கரும்பே 
ஒண்மணியே  தேனேஎன்  றொற்றியப்பா  உன்தனைநான் 
பண்மணஞ்செய்  பாட்டில்  பரவித்  துதியேனோ. 
13
மானமிலார்  நின்தாள்  வழுத்தாத  வன்மனத்தார் 
ஈனர்அவர்  பால்போய்  இளைத்தேன்  இளைப்பாற 
ஊனமிலார்  போற்றுகின்ற  ஒற்றியப்பா  உன்னுடைய 
ஞான  அடியின்நிழல்  நண்ணி  மகிழேனோ. 
14
கல்லார்க்  கிதங்கூறிக்  கற்பழிந்து  நில்லாமல் 
எல்லார்க்கும்  நல்லவனே  என்அரசே  நல்தருமம் 
ஒல்லார்  புரமெரித்த  ஒற்றியப்பா  உன்அடிக்கே 
சொல்லால்  மலர்தொடுத்துச்  சூழ்ந்தணிந்து  வாழேனோ. 
15
கற்பவற்றைக்  கல்லாக்  கடையரிடம்  சென்றவர்முன் 
அற்பஅற்றைக்  கூலிக்  கலையும்  அலைப்பொழிய 
உற்பவத்தை  நீக்குகின்ற  ஒற்றியப்பா  உன்னுடைய 
நற்பதத்தை  ஏத்திஅருள்  நல்நலந்தான்  நண்ணேனோ. 
16
தந்தைதாய்  மக்கள்மனை  தாரம்எனும்  சங்கடத்தில் 
சிந்தைதான்  சென்று  தியங்கி  மயங்காமே 
உந்தைஎன்போர்  இல்லாத  ஒற்றியப்பா  உன்அடிக்கீழ் 
முந்தையோர்  போன்று  முயங்கி  மகிழேனோ. 
17
பொய்ஒன்றே  அன்றிப்  புறம்பொன்றும்  பேசாத 
வையொன்றும்  தீநாற்ற  வாயார்க்கு  மேலானேன் 
உய்என்  றருள்ஈயும்  ஒற்றியப்பா  உன்னுடைய 
மெய்ஒன்று  நீற்றின்  விளக்கமது  பாரேனோ. 
18
தூக்கமும்முன்  தூங்கியபின்  சோறிலையே  என்னும்அந்த 
ஏக்கமுமே  அன்றிமற்றோர்  ஏக்கமிலா  ஏழையனேன் 
ஊக்கமுளோர்  போற்றுகின்ற  ஒற்றியப்பா  நின்அடிக்கீழ் 
நீக்கமிலா  ஆனந்த  நித்திரைதான்  கொள்ளேனோ. 
19
வாதுபுரிந்  தீன  மடவார்  மதித்திடுவான் 
போதுநிதம்  போக்கிப்  புலம்பும்  புலைநாயேன் 
ஓதுமறை  யோர்குலவும்  ஒற்றியப்பா  ஊரனுக்காத் 
தூதுசென்ற  நின்தாள்  துணைப்புகழைப்  பாடேனோ. 
20
பொன்னாசை  யோடும்  புலைச்சியர்தம்  பேராசை 
மன்னாசை  மன்னுகின்ற  மண்ணாசைப்  பற்றறுத்தே 
உன்னாசை  கொண்டேஎன்  ஒற்றியப்பா  நான்மகிழ்ந்துன் 
மின்னாரும்  பொன்மேனி  வெண்ற்றைப்  பாரேனோ. 
21
கள்உண்ட  நாய்போல்  கடுங்காம  வெள்ளமுண்டு 
துள்உண்ட  நெஞ்சத்  துடுக்கடக்கி  அன்பர்கள்தம் 
உள்உண்ட  தெள்அமுதே  ஒற்றியப்பா  உன்தனைநான் 
வெள்உண்ட  நந்தி  விடைமீதில்  காணேனோ. 
22
பேராத  காமப்  பிணிகொண்ட  நெஞ்சகனேன் 
வாராத  ஆனந்த  வாழ்வுவந்து  வாழ்ந்திடவே 
ஓராதார்க்  கெட்டாத  ஒற்றியப்பா  உன்னுடைய 
நீரார்  சடைமேல்  நிலவொளியைக்  காணேனோ. 
23
வன்னெஞ்சப்  பேதை  மடவார்க்  கழிந்தலையும் 
கன்னெஞ்சப்  பாவியன்யான்  காதலித்து  நெக்குருகி 
உன்னெஞ்சத்  துள்உறையும்  ஒற்றியப்பா  உன்னுடைய 
வென்னஞ்  சணிமிடற்றை  மிக்குவந்து  வாழ்த்தேனோ. 
24
புண்ணியமோர்  போதும்  புரிந்தறியாப்  பொய்யவனேன் 
எண்ணியதோர்  எண்ணம்  இடர்இன்றி  முற்றியிட 
உண்ணிலவு  நல்ஒளியே  ஒற்றியப்பா  உன்னுடைய 
தண்ணிலவு  தாமரைப்பொன்  தாள்முடியில்  கொள்ளேனோ. 
25
நன்றிதுஎன்  றோர்ந்தும்அதை  நாடாது  நல்நெறியைக் 
கொன்றிதுநன்  றென்னக்  குறிக்கும்  கொடியவன்யான் 
ஒன்றுமனத்  துள்ஒளியே  ஒற்றியப்பா  உன்னுடைய 
வென்றி  மழுப்படையின்  மேன்மைதனைப்  பாடேனோ. 
26
மண்கிடந்த  வாழ்வின்  மதிமயக்கும்  மங்கையரால் 
புண்கிடந்த  நெஞ்சப்  புலையேன்  புழுக்கம்அற 
ஒண்கிடந்த  முத்தலைவேல்  ஒற்றியப்பா  நாரணன்தன் 
கண்கிடந்த  சேவடியின்  காட்சிதனைக்  காணேனோ. 
27
கூட்டுவிக்குள்  மேல்எழவே  கூற்றுவன்வந்  தாவிதனை 
வாட்டுவிக்கும்  காலம்  வருமுன்னே  எவ்வுயிர்க்கும் 
ஊட்டுவிக்கும்  தாயாகும்  ஒற்றியப்பா  நீஉலகை 
ஆட்டுவிக்கும்  அம்பலத்துன்  ஆட்டமதைப்  பாரேனோ. 
28
மின்ஒப்பாம்  வாழ்வை  வியந்திடருள்  வீழ்ந்தலைந்தேன் 
பொன்ஒப்பாய்  தெய்வமணப்  பூஒப்பாய்  என்னினுமே 
உன்ஒப்பார்  இல்லாத  ஒற்றியப்பா  உன்னுடைய 
தன்ஒப்பாம்  வேணியின்மேல்  சார்பிறையைப்  பாரேனோ. 
29
சீலம்அற  நிற்கும்  சிறியார்  உறவிடைநல் 
காலம்அறப்  பேசிக்  கழிக்கின்றேன்  வானவர்தம் 
ஓலம்அற  நஞ்சருந்தும்  ஒற்றியப்பா  உன்னுடைய 
நீல  மணிமிடற்றின்  நேர்மைதனைப்  பாரேனோ. 
30
சீர்புகழும்  மால்புகழும்  தேவர்அயன்  தன்புகழும் 
யார்புகழும்  வேண்டேன்  அடியேன்  அடிநாயேன் 
ஊர்புகழும்  நல்வளங்கொள்  ஒற்றியப்பா  உன்இதழித் 
தார்புகழும்  நல்தொழும்பு  சார்ந்துன்பால்  நண்ணேனோ. 
31
ஆதவன்தன்  பல்இறுத்த  ஐயற்  கருள்புரிந்த 
நாதஅர  னேஎன்று  நாத்தழும்பு  கொண்டேத்தி 
ஓதவள  மிக்கஎழில்  ஒற்றியப்பா  மண்ணிடந்தும் 
மாதவன்முன்  காணா  மலர்அடிக்கண்  வைகேனோ. 
32
கல்லைப்  புறங்கண்ட  காய்மனத்துக்  கைதவனேன் 
தொல்லைப்  பழவினையின்  தோய்வகன்று  வாய்ந்திடவே 
ஒல்லைத்  திருவருள்கொண்  டொற்றியப்பா  உன்னுடைய 
தில்லைப்  பொதுவில்  திருநடனம்  காணேனோ. 
33
கடையவனேன்  கன்மனத்தேன்  கைதவனேன்  வஞ்ச 
நடையவனேன்  நாணிலியேன்  நாய்க்கிணையேன்  துன்பொழிய 
உடையவனே  உலகேத்தும்  ஒற்றியப்பா  நின்பால்வந் 
தடையநின்று  மெய்குளிர்ந்தே  ஆனந்தம்  கூடேனோ. 
34
வாதை  மயல்காட்டும்  மடவார்  மலக்குழியில் 
பேதை  எனவீழ்ந்தே  பிணிஉழந்த  பேயடியேன் 
ஓதை  கடற்கரைவாய்  ஒற்றியப்பா  வாழ்த்துகின்றோர் 
தீதை  அகற்றும்உன்றன்  சீர்அருளைச்  சேரேனோ. 
35
பொய்யர்க்  குதவுகின்ற  புன்மையினேன்  வன்மைசெயும் 
வெய்யற்  கிரிமியென  மெய்சோர்ந்  திளைத்தலைந்தேன் 
உய்யற்  கருள்செய்யும்  ஒற்றியப்பா  உன்அடிசேர் 
மெய்யர்க்  கடிமை  செய்துன்  மென்மலர்த்தாள்  நண்ணேனோ. 
36
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com