திருவருட்பா  46. திருவிண்ணப்பம்

சழக்கி  ருந்ததென்  னிடத்தில்ஆ  யினும்நீர் 
தந்தை  ஆதலின்  சார்ந்தநல்  நெறியில் 
பழக்கி  வைப்பது  தேவரீர்க்  குரிய 
பண்பன்  றோஎனைப்  பரிந்திலீர்  ஆனால் 
வழக்கி  ருப்பதிங்  குமக்குமென்  றனக்கும் 
வகுத்துக்  கூறுதல்  மரபுமற்  றன்றால் 
புழைக்கை  மாவுரி  யீர்ஒற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
1
அழுது  நெஞ்சயர்ந்  துமைநினைக்  கின்றேன் 
ஐய  நீர்அறி  யாததும்  அன்றே 
கழுது  துன்றிய  காட்டகத்  தாடும் 
கதியி  லீர்எனக்  கழறினன்  அல்லால் 
பழுது  பேசின  தொன்றிலை  ஒற்றிப் 
பதியில்  வாழ்படம்  பக்கநா  யகரே 
பொழுது  போகின்ற  தென்செய்கேன்  எனைநீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
2
முன்னை  மாதவ  முயற்சிஒன்  றில்லா 
மூட  னேன்தனை  முன்வர  வழைத்துப் 
பிள்னை  ஒன்றும்வாய்ப்  பேச்சிலீ  ரானால் 
பித்தர்  என்றுமைப்  பேசிட  லாமே 
என்னை  நான்பழித்  திடுகின்ற  தல்லால் 
இகழ்கி  லேன்உமை  எழில்ஒற்றி  உடையீர் 
புன்னை  அஞ்சடை  யீர்எனை  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
3
வன்மை  பேசிய  வன்தொண்டர்  பொருட்டாய் 
வழக்குப்  பேசிய  வள்ளல்நீர்  அன்றோ 
இன்மை  யாளர்போல்  வலியவந்  திடினும் 
ஏழை  யாம்இவன்  என்றொழித்  திட்டால் 
தன்மை  அன்றது  தருமமும்  அன்றால் 
தமிய  னேன்இன்னும்  சாற்றுவ  தென்னே 
பொன்மை  அஞ்சடை  யீர்ஒற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
4
உறங்கு  கின்றதும்  விழிப்பதும்  மகிழ்வாய் 
உண்ணு  கின்றதும்  உடுப்பதும்  மயக்குள் 
இறங்கு  கின்றதும்  ஏறுகின்  றதுமாய் 
எய்க்கின்  றேன்மனம்  என்னினும்  அடியேன் 
அறங்கொள்  நும்அடி  அரண்என  அடைந்தேன் 
அயர்வு  தீர்த்தெனை  ஆட்கொள  நினையீர் 
புறங்கொள்  காட்டகத்  தீர்ஒற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
5
கரும்பின்  கட்டியும்  கனியையும்  கொடுத்தால் 
கயவர்  ஆயினும்  கசக்கும்என்  றுரையார் 
அரும்பின்  கட்டிள  முலைஉமை  மகிழும் 
ஐய  நீர்உம  தருள்எனக்  களிக்க 
இரும்பின்  கட்டிநேர்  நெஞ்சினேன்  எனினும் 
ஏற்று  வாங்கிடா  திருந்ததுண்  டேயோ 
பொரும்பின்  கட்டுரி  யீர்ஒற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
6
விருப்பு  நின்றதும்  பதமலர்  மிசைஅவ் 
விருப்பை  மாற்றுதல்  விரகுமற்  றன்றால் 
கருப்பு  நேரினும்  வள்ளியோர்  கொடுக்கும் 
கடமை  நீங்குறார்  உடமையின்  றேனும் 
நெருப்பு  நும்உரு  ஆயினும்  அருகில் 
நிற்க  அஞ்சுறேன்  நீலனும்  அன்றால் 
பொருப்பு  வில்லுடை  யீர்ஒற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
7
கொடிய  நஞ்சமு  தாக்கிய  உமக்கிக் 
கொடிய  னேனைஆட்  கொள்ளுதல்  அரிதோ 
அடியர்  தம்பொருட்  டடிபடு  வீர்எம் 
ஐய  நும்மடிக்  காட்பட  விரைந்தேன் 
நெடிய  மால்அயன்  காண்கில  ரேனும் 
நின்று  காண்குவல்  என்றுளம்  துணிந்தேன் 
பொடிய  நீறணி  வீர்ஒற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
8
வினையி  னால்உடல்  எடுத்தன  னேனும் 
மேலை  நாள்உமை  விரும்பிய  அடியேன் 
எனைஇன்  னான்என  அறிந்திலி  ரோநீர் 
எழுமைச்  செய்கையும்  இற்றென  அறிவீர் 
மனையி  னால்வரும்  துயர்கெட  உமது 
மரபு  வேண்டியே  வந்துநிற்  கின்றேன் 
புனையி  னால்அமர்ந்  தீர்ஒற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
9
பிழைபு  ரிந்தனன்  ஆகிலும்  உமது 
பெருமை  நோக்கில்அப்  பிழைசிறி  தன்றோ 
மழைபு  ரிந்திடும்  வண்கையை  மாற்ற 
மதிக்கின்  றோர்எவர்  மற்றிலை  அதுபோல் 
உழைபு  ரிந்தருள்  வீர்எனில்  தடுப்பார் 
உம்பர்  இம்பரில்  ஒருவரும்  இலைகாண் 
புழைபு  ரிந்தகை  உலவொற்றி  உடையீர் 
பொய்யன்  என்னில்யான்  போம்வழி  எதுவோ. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com