திருவருட்பா  52. பொதுநடம்

அருட்பெருஞ்  சோதி  அமுதமே  அமுதம் 
அளித்தெனை  வளர்த்திட  அருளாம் 
தெருட்பெருந்  தாய்தன்  கையிலே  கொடுத்த 
தெய்வமே  சத்தியச்  சிவமே 
இருட்பெரு  நிலத்தைக்  கடத்திஎன்  றனைமேல் 
ஏற்றிய  இன்பமே  எல்லாப் 
பொருட்பெரு  நெறியும்  காட்டிய  குருவே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
1
சித்தெலாம்  வல்ல  சித்தனே  ஞான 
சிதம்பர  ஜோதியே  சிறியேன் 
கத்தெலாம்  தவிர்த்துக்  கருத்தெலாம்  அளித்த 
கடவுளே  கருணையங்  கடலே 
சத்தெலாம்  ஒன்றே  சத்தியம்  எனஎன் 
தனக்கறி  வித்ததோர்  தயையே 
புத்தெலாம்  நீக்கிப்  பொருளெலாம்  காட்டும் 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
2
கலைகளோர்  அனந்தம்  அனந்தமேல்  நோக்கிக் 
கற்பங்கள்  கணக்கில  கடப்ப 
நிலைகளோர்  அனந்தம்  நேடியுங்  காணா 
நித்திய  நிற்குண  நிறைவே 
அலைகளற்  றுயிருக்  கமுதளித்  தருளும் 
அருட்பெருங்  கடல்எனும்  அரசே 
புலைகள  வகற்றி  எனக்குளே  நிறைந்து 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
3
தண்ணிய  மதியே  தனித்தசெஞ்  சுடரே 
சத்திய  சாத்தியக்  கனலே 
ஒண்ணிய  ஒளியே  ஒளிக்குள்ஓர்  ஒளியே 
உலகெலாந்  தழைக்கமெய்  உளத்தே 
நண்ணிய  விளக்கே  எண்ணிய  படிக்கே 
நல்கிய  ஞானபோ  னகமே 
புண்ணிய  நிதியே  கண்ணிய  நிலையே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
4
அற்புத  நிறைவே  சற்புதர்  அறிவில் 
அறிவென  அறிகின்ற  அறிவே 
சொற்புனை  மாயைக்  கற்பனை  கடந்த 
துரியநல்  நிலத்திலே  துலங்கும் 
சிற்பரஞ்  சுடரே  தற்பர  ஞானச் 
செல்வமே  சித்தெலாம்  புரியும் 
பொற்புலம்  அளித்த  நற்புலக்  கருத்தே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
5
தத்துவ  பதியே  தத்துவம்  கடந்த 
தனித்ததோர்  சத்திய  பதியே 
சத்துவ  நெறியில்  சார்ந்தசன்  மார்க்கர் 
தமக்குளே  சார்ந்தநற்  சார்பே 
பித்துறு  சமயப்  பிணக்குறும்  அவர்க்குப் 
பெறல்அரி  தாகிய  பேறே 
புத்தமு  தளித்தென்  உளத்திலே  கலந்து 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
6
மேல்வெளி  காட்டி  வெளியிலே  விளைந்த 
விளைவெலாம்  காட்டிமெய்  வேத 
நூல்வழி  காட்டி  என்னுளே  விளங்கும் 
நோக்கமே  ஆக்கமும்  திறலும் 
நால்வகைப்  பயனும்  அளித்தெனை  வளர்க்கும் 
நாயகக்  கருணைநற்  றாயே 
போலுயிர்க்  குயிராய்ப்  பொருந்திய  மருந்தே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
7
அலப்பற  விளங்கும்  அருட்பெரு  விளக்கே 
அரும்பெருஞ்  சோதியே  சுடரே 
மலப்பிணி  அறுத்த  வாய்மைஎம்  மருந்தே 
மருந்தெலாம்  பொருந்திய  மணியே 
உலப்பறு  கருணைச்  செல்வமே  எல்லா 
உயிர்க்குளும்  நிறைந்ததோர்  உணர்வே 
புலப்பகை  தவிர்க்கும்  பூரண  வரமே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
8
பரம்பர  நிறைவே  பராபர  வெளியே 
பரமசிற்  சுகந்தரும்  பதியே 
வரம்பெறு  சிவசன்  மார்க்கர்தம்  மதியில் 
வயங்கிய  பெருஞ்சுடர்  மணியே 
கரம்பெறு  கனியே  கனிவுறு  சுவையே 
கருதிய  கருத்துறு  களிப்பே 
புரம்புகழ்  நிதியே  சிரம்புகல்  கதியே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
9
வெற்புறு  முடியில்  தம்பமேல்  ஏற்றி 
மெய்ந்நிலை  அமர்வித்த  வியப்பே 
கற்புறு  கருத்தில்  இனிக்கின்ற  கரும்பே 
கருணைவான்  அமுதத்தெண்  கடலே 
அற்புறும்  அறிவில்  அருள்ஒளி  ஆகி 
ஆனந்த  மாம்அனு  பவமே 
பொற்புறு  பதியே  அற்புத  நிதியே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
10
தன்மைகாண்  பரிய  தலைவனே  எல்லாம் 
தரவல்ல  சம்புவே  சமயப் 
புன்மைநீத்  தகமும்  புறமும்ஒத்  தமைந்த 
புண்ணியர்  நண்ணிய  புகலே 
வன்மைசேர்  மனத்தை  நன்மைசேர்  மனமா 
வயங்குவித்  தமர்ந்தமெய்  வாழ்வே 
பொன்மைசார்  கனகப்  பொதுவொடு  ஞானப் 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
11
மூவிரு  முடிபின்  முடிந்ததோர்  முடிபே 
முடிபெலாம்  கடந்ததோர்  முதலே 
தாவிய  முதலும்  கடையும்மேற்  காட்டாச் 
சத்தியத்  தனிநடு  நிலையே 
மேவிய  நடுவில்  விளங்கிய  விளைவே 
விளைவெலாம்  தருகின்ற  வெளியே 
பூவியல்  அளித்த  புனிதசற்  குருவே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
12
வேதமும்  பொருளும்  பயனும்ஓர்  அடைவும் 
விளம்பிய  அனுபவ  விளைவும் 
போதமும்  சுகமும்  ஆகிஇங்  கிவைகள் 
போனது  மாய்ஒளிர்  புலமே 
ஏதமுற்  றிருந்த  ஏழையேன்  பொருட்டிவ் 
விருநிலத்  தியல்அருள்  ஒளியால் 
பூதநல்  வடிவம்  காட்டிஎன்  உளத்தே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
13
அடியனேன்  பொருட்டிவ்  வவனிமேல்  கருணை 
அருள்வடி  வெடுத்தெழுந்  தருளி 
நெடியனே  முதலோர்  பெறற்கரும்  சித்தி 
நிலைஎலாம்  அளித்தமா  நிதியே 
மடிவுறா  தென்றும்  சுத்தசன்  மார்க்கம் 
வயங்கநல்  வரந்தந்த  வாழ்வே 
பொடிஅணி  கனகப்  பொருப்பொளிர்  நெருப்பே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
14
என்பிழை  அனைத்தும்  பொறுத்தருள்  புரிந்தென் 
இதயத்தில்  இருக்கின்ற  குருவே 
அன்புடை  அரசே  அப்பனே  என்றன் 
அம்மையே  அருட்பெருஞ்  சோதி 
இன்புறு  நிலையில்  ஏற்றிய  துணையே 
என்னுயிர்  நாதனே  என்னைப் 
பொன்புனை  மாலை  புனைந்தஓர்  பதியே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
15
சத்திய  பதியே  சத்திய  நிதியே 
சத்திய  ஞானமே  வேத 
நித்திய  நிலையே  நித்திய  நிறைவே 
நித்திய  வாழ்வருள்  நெறியே 
சித்திஇன்  புருவே  சித்தியின்  கருவே 
சித்தியிற்  சித்தியே  எனது 
புத்தியின்  தெளிவே  புத்தமு  தளித்துப் 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
16
சிதத்தொளிர்  பரமே  பரத்தொளிர்  பதியே 
சிவபத  அனுபவச்  சிவமே 
மதத்தடை  தவிர்த்த  மதிமதி  மதியே 
மதிநிறை  அமுதநல்  வாய்ப்பே 
சதத்திரு  நெறியே  தனிநெறித்  துணையே 
சாமியே  தந்தையே  தாயே 
புதப்பெரு  வரமே  புகற்கருந்  தரமே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
17
கலைவளர்  கலையே  கலையினுட்  கலையே 
கலைஎலாம்  தரும்ஒரு  கருவே 
நிலைவளர்  கருவுட்  கருஎன  வயங்கும் 
நித்திய  வானமே  ஞான 
மலைவளர்  மருந்தே  மருந்துறு  பலனே 
மாபலம்  தருகின்ற  வாழ்வே 
புலைதவிர்த்  தெனையும்  பொருளெனக்  கொண்டு 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
18
மெய்ம்மையே  கிடைத்த  மெய்ம்மையே  ஞான 
விளக்கமே  விளக்கத்தின்  வியப்பே 
கைம்மையே  தவிர்த்து  மங்கலம்  அளித்த 
கருணையே  கரிசிலாக்  களிப்பே 
ஐம்மையே  அதற்குள்  அதுஅது  ஆகும் 
அற்புதக்  காட்சியே  எனது 
பொய்ம்மையே  பொருத்துப்  புகலளித்  தருளிப் 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
19
காரண  அருவே  காரிய  உருவே 
காரண  காரியம்  காட்டி 
ஆரண  முடியும்  ஆகம  முடியும் 
அமர்ந்தொளிர்  அற்புதச்  சுடரே 
நாரண  தலமே  நாரண  வலமே 
நாரணா  காரத்தின்  ஞாங்கர்ப் 
பூரண  ஒளிசெய்  பூரண  சிவமே 
பொதுநடம்  புரிகின்ற  பொருளே. 
20
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com