
அன்பனே அப்பா அம்மையே அரசே
அருட்பெருஞ் சோதியே அடியேன்
துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
சுகத்திலே தோற்றிய சுகமே
இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
என்னுளே இலங்கிய பொருளே
வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
பெருக்கமே என்பெரும் பேறே
உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
உண்மைவான் அமுதமே என்பால்
கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
கருணையங் கடவுளே விரைந்து
வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
என்னிரு கண்ணினுள் மணியே
இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
இணையிலா என்னுடை அன்பே
சொந்தநல் உறவே அம்பலத் தரசே
சோதியே சோதியே விரைந்து
வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
கோஎன எனது குருஎன ஞான
குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
பூஎன அதிலே மணம்என வணத்தின்
பொலிவென வயங்கிய பொற்பே
தேவெனத் தேவ தேவென ஒருமைச்
சிவம்என விளங்கிய பதியே
வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
ஒருவனே உலகெலாம் அறியத்
தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
கடவுளே கனகஅம் பலத்தென்
வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
நல்லவா அளித்த நல்லவா எனையும்
நயந்தவா நாயினேன் நவின்ற
சொல்லவா எனக்குத் துணையவா ஞான
சுகத்தவா சோதிஅம் பலவா
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
ஆண்டவா தாண்டவா எல்லாம்
வல்லவா என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
திண்மையே முதலைங் குணக்கரு வாய
செல்வமே நல்வழி காட்டும்
கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
கண்ணுற இயைந்தநற் கருத்தே
உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
ஒருதனித் தெய்வமே உலவா
வண்மையே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
கற்பகத் தனிப்பெருந் தருவே
தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
சித்தியே சுத்தசன் மார்க்க
வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
ஈன்றவா என்னவா வேதம்
சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
துதியவா அம்பலத் தமுதம்
அன்னவா அறிவால் அறியரி வறிவா
ஆனந்த நாடகம் புரியும்
மன்னவா என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
விளக்கினால் என்னுளம் விளக்கி
இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
கென்கருத் தனைத்தையும் புரிந்தே
சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
சத்தியைத் தயவினால் தருக
வரதனே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.



