திருவருட்பா  57. அனுபவ நிலை

நான்செய்த  புண்ணியம்  என்னுரைக்  கேன்பொது  நண்ணியதோர் 
வான்செய்த  மாமணி  என்கையில்  பெற்றுநல்  வாழ்வடைந்தேன் 
ஊன்செய்த  தேகம்  ஒளிவடி  வாகநின்  றோங்குகின்றேன் 
தேன்செய்த  தெள்ளமு  துண்டேன்கண்  டேன்மெய்த்  திருநிலையே. 
1
நான்செய்த  புண்ணியம்  என்னுரைப்  பேன்பொது  நண்ணியதோர் 
வான்செய்த  மெய்ப்பொருள்  என்கையிற்  பெற்றுமெய்  வாழ்வடைந்தேன் 
கோன்செய்த  பற்பல  கோடிஅண்  டங்களும்  கூறவற்றில் 
தான்செய்த  பிண்டப்  பகுதியும்  நான்செயத்  தந்தனனே. 
2
திருநிலை  பெற்றனன்  அம்பலத்  தான்அருள்  தெள்ளமுதுண் 
டுருநிலை  பெற்றனன்  ஒன்றே  சிவமென  ஓங்குகின்ற 
பெருநிலை  பெற்றனன்  சுத்தசன்  மார்க்கம்  பிடித்துநின்றேன் 
இருநிலை  முந்நிலை  எல்லா  நிலையும்  எனக்குளவே. 
3
எத்தனை  நான்குற்றம்  செய்தும்  பொறுத்தனை  என்னைநின்பால் 
வைத்தனை  உள்ளம்  மகிழ்ந்தனை  நான்சொன்ன  வார்த்தைகள்இங் 
கத்தனை  யும்சம்  மதித்தருள்  செய்தனை  அம்பலத்தே 
முத்தனை  யாய்நினக்  கென்மேல்  இருக்கின்ற  மோகம்என்னே. 
4
இனியே  இறையும்  சகிப்பறி  யேன்எனக்  கின்பநல்கும் 
கனியேஎன்  தன்இரு  கண்ணேமுக்  கண்கொண்ட  கற்பகமே 
தனியேஎன்  அன்புடைத்  தாயேசிற்  றம்பலம்  சார்தந்தையே 
முனியேல்  அருள்க  அருள்கமெய்ஞ்  ஞானம்  முழுதையுமே. 
5
புத்தியஞ்  சேல்சற்றும்  என்நெஞ்ச  மேசிற்  பொதுத்தந்தையார் 
நித்தியஞ்  சேர்ந்த  நெறியில்  செலுத்தினர்  நீஇனிநன் 
முத்தியும்  ஞானமெய்ச்  சித்தியும்  பெற்று  முயங்கிடுவாய் 
சத்தியம்  சத்தியம்  சத்தியம்  சத்தியம்  சத்தியமே. 
6
கூடிய  நாளிது  தான்தரு  ணம்எனைக்  கூடிஉள்ளே 
வாடிய  வாட்டமெல்  லாந்தவிர்த்  தேசுக  வாழ்வளிப்பாய் 
நீடிய  தேல்இனிச்  சற்றும்பொ  றேன்உயிர்  நீத்திடுவேன் 
ஆடிய  பாதம்  அறியச்சொன்  னேன்என  தாண்ட  வனே. 
7
ஆக்கிய  நாள்இது  தான்தரு  ணம்அருளா  ரமுதம் 
தேக்கிமெய்  இன்புறச்  செய்தருள்  செய்தருள்  செய்தருள்நீ 
நீக்கினை  யேல்இனிச்  சற்றும்பொ  றேன்உயிர்  நீத்திடுவேன் 
தூக்கிய  பாதம்  அறியச்சொன்  னேன்அருட்  சோதியனே. 
8
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com