திருவருட்பா  82. அருட்பெருஞ்சோதி அடைவு

அருட்பெருஞ்  சோதிஎன்  ஆருயி  ரில்கலந்  தாடுகின்ற 
அருட்பெருஞ்  சோதிஎன்  அன்பிற்  கலந்தறி  வாய்விளங்கும் 
அருட்பெருஞ்  சோதித்தெள்  ளாரமு  தாகிஉள்  அண்ணிக்கின்ற 
அருட்பெருஞ்  சோதிநின்  ஆசைஒன்  றேஎன்னுள்  ஆர்கின்றதே. 
1
ஆர்கின்ற  தெள்ளமு  தின்சுவை  என்என்  றறைவன்அந்தோ 
சார்கின்ற  சிற்றம்  பலப்பெருஞ்  சீரினைச்  சாற்றுதொறும் 
சேர்கின்ற  நாவுடன்  உள்ளமும்  ஆவியும்  தித்தித்தலே 
நேர்கின்ற  தால்என்  அருட்பெருஞ்  சோதி  நிறைந்துளத்தே. 
2
உளத்தே  பெருங்களிப்  புற்றடி  யேன்மிக  உண்ணுகின்றேன் 
வளத்தே  அருட்பெருஞ்  சோதியி  னால்ஒளி  வாய்ந்தெனது 
குளத்தே  நிறைந்தணை  யுங்கடந்  தோங்கிக்  குலவுபரி 
மளத்தே  மிகுந்து  வயங்கும்  அமுதம்  மனமகிழ்ந்தே. 
3
மனமகிழ்ந்  தேன்மன  மாயையை  நீக்கினன்  மாநிலத்தே 
சினமொடும்  காமமும்  தீர்ந்தேன்  எலாம்வல்ல  சித்தும்பெற்றேன் 
இனமிகும்  சுத்தசன்  மார்க்கப்  பெருநெறி  எய்திநின்றேன் 
கனமிகும்  மன்றில்  அருட்பெருஞ்  சோதியைக்  கண்டுகொண்டே. 
4
கண்டேன்  அருட்பெருஞ்  சோதியைக்  கண்களில்  கண்டுகளி 
கொண்டேன்  சிவானந்தக்  கூத்தாடிக்  கொண்டிக்  குவலயத்தே 
தொண்டே  திருஅம்  பலந்தனக்  காக்கிச்  சுகஅமுதம் 
உண்டேன்  உயிர்தழைத்  தோங்குகின்  றேன்உள்  உவப்புறவே. 
5
உறவே  எனதின்  னுயிரேஎன்  உள்ளத்தில்  உற்றினிக்கும் 
நறவே  அருட்பெருஞ்  சோதிமன்  றோங்கு  நடத்தரசே 
இறவேன்  எனத்துணி  வெய்திடச்  செய்தனை  என்னைஇனி 
மறவேல்  அடிச்சிறி  யேன்ஒரு  போது  மறக்கினுமே. 
6
மறப்பேன்  அலேன்உன்னை  ஓர்கண  மேனும்  மறக்கில்அன்றே 
இறப்பேன்  இதுசத்  தியம்சத்  தியம்சத்  தியம்இசைத்தேன் 
பிறப்பே  தவிர்த்தெனை  ஆட்கொண்  டமுதம்  பெரிதளித்த 
சிறப்பே  அருட்பெருஞ்  சோதிமன்  றோங்கு  செழுஞ்சுடரே. 
7
சுடரே  அருட்பெருஞ்  சோதிய  னேபெண்  சுகத்தைமிக்க 
விடரே  எனினும்  விடுவர்எந்  தாய்நினை  விட்டயல்ஒன் 
றடரேன்  அரைக்கண  மும்பிரிந்  தாற்றலன்  ஆணைகண்டாய் 
இடரே  தவிர்த்தெனக்  கெல்லா  நலமும்இங்  கீந்தவனே. 
8
தவநேய  மும்சுத்த  சன்மார்க்க  நேயமும்  சத்தியமாம் 
சிவநேய  மும்தந்தென்  உள்ளம்  தெளியத்  தெளித்தனையே 
நவநேய  மன்றில்  அருட்பெருஞ்  சோதியை  நாடிநின்ற 
இவனே  அவன்எனக்  கொள்வார்உன்  அன்பர்  இருநிலத்தே. 
9
நிலத்தே  புழுத்த  புழுவும்  அலேன்புன்  நிலத்திழிந்த 
மலத்தே  புழுத்த  புழுஅனை  யேனைஅவ்  வான்துதிக்கும் 
குலத்தே  தலைமை  கொடுத்தென்  உளத்தில்  குலவுகின்றாய் 
தலத்தே  அருட்பெருஞ்  சோதிஅப்  பாஎன்  தயாநிதியே. 
10
நிதியே  என்னுள்ள  நிறைவே  பொதுவில்  நிறைந்தசிவ 
பதியே  அருட்பெருஞ்  சோதிய  னேஅம்  பலம்விளங்கும் 
கதியே  என்கண்ணும்  கருத்தும்  களிக்கக்  கலந்துகொண்ட 
மதியே  அமுத  மழையேநின்  பேரருள்  வாழியவே. 
11
வாழிஎன்  றேஎனை  மால்அயன்  ஆதியர்  வந்தருட்பேர் 
ஆழிஎன்  றேதுதித்  தேத்தப்  புரிந்தனை  அற்புதம்நீ 
டூழிஅன்  றேஎன்றும்  சாகா  வரமும்  உவந்தளித்தாய் 
வாழிமன்  றோங்கும்  அருட்பெருஞ்  சோதிநின்  மன்னருளே. 
12
மன்னிய  நின்அரு  ளாரமு  தம்தந்து  வாழ்வித்துநான் 
உன்னிய  உன்னிய  எல்லாம்  உதவிஎன்  உள்ளத்திலே 
தன்னியல்  ஆகிக்  கலந்தித்  தருணம்  தயவுசெய்தாய் 
துன்னிய  நின்னருள்  வாழ்க  அருட்பெருஞ்  சோதியனே. 
13
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com