திருவருட்பா  85. திருவருட்பேறு

சீர்விளங்கு  சுத்தத்  திருமேனி  தான்தரித்துப் 
பார்விளங்க  நான்படுத்த  பாயலிலே  -  தார்விளங்க 
வந்தாய்  எனைத்தூக்கி  மற்றொருசார்  வைத்தனையே 
எந்தாய்நின்  உள்ளமறி  யேன். 
1
பயத்தோ  டொருபால்  படுத்திருந்தேன்  என்பால் 
நயத்தோ  டணைந்தே  நகைத்து  -  வயத்தாலே 
தூக்கி  எடுத்தெனைமேல்  சூழலிலே  வைத்தனைநான் 
பாக்கியவான்  ஆனேன்  பதிந்து. 
2
என்னேநின்  தண்ணருளை  என்னென்பேன்  இவ்வுலகில் 
முன்னே  தவந்தான்  முயன்றேனோ  -  கொன்னே 
படுத்தயர்ந்தேன்  நான்படுத்த  பாய்அருகுற்  றென்னை 
எடுத்தொருமேல்  ஏற்றிவைத்தா  யே. 
3
சிந்தா  குலத்தொடுநான்  தெய்வமே  என்றுநினைந் 
தந்தோ  படுத்துள்  அயர்வுற்றேன்  -  எந்தாய் 
எடுத்தாள்  எனநினையா  தேகிடந்தேன்  என்னை 
எடுத்தாய்  தயவைவிய  வேன். 
4
உன்னுகின்ற  தோறுமென  துள்ளம்  உருகுகின்ற 
தென்னுரைப்பேன்  என்னுரைப்பேன்  எந்தாயே  -  துன்னிநின்று 
தூக்கம்  தவிர்த்தென்னைத்  தூக்கிஎடுத்  தன்பொடுமேல் 
ஆக்கமுற  வைத்தாய்  அது. 
5
நான்படுத்த  பாய்அருகில்  நண்ணி  எனைத்தூக்கி 
ஊன்படுத்த  தேகம்  ஒளிவிளங்கத்  -  தான்பதித்த 
மேலிடத்தே  வைத்தனைநான்  வெம்மைஎலாம்  தீர்ந்தேன்நின் 
காலிடத்தே  வாழ்கின்றேன்  காண். 
6
புண்ணியந்தான்  யாது  புரிந்தேனோ  நானறியேன் 
பண்ணியதுன்  போடே  படுத்திருந்தேன்  -  நண்ணிஎனைத் 
தூக்கி  எடுத்தெனது  துன்பமெலாந்  தீர்த்தருளி 
ஆக்கியிடென்  றேயருள்தந்  தாய். 
7
அஞ்சிஅஞ்சி  ஊணும்  அருந்தாமல்  ஆங்கொருசார் 
பஞ்சின்  உழந்தே  படுத்தயர்ந்தேன்  -  விஞ்சிஅங்கு 
வந்தாய்  எனைத்தூக்கி  மற்றொருசார்  வைத்தமுது 
தந்தாய்என்  நான்செய்  தவம். 
8
நானே  தவம்புரிந்தேன்  நானே  களிப்படைந்தேன் 
தேனே  எனும்அமுதம்  தேக்கஉண்டேன்  -  ஊனே 
ஒளிவிளங்கப்  பெற்றேன்  உடையான்  எனைத்தான் 
அளிவிளங்கத்  தூக்கிஅணைத்  தான். 
9
வாழி  எனைத்தூக்கி  வைத்த  கரதலங்கள் 
வாழி  எலாம்வல்ல  மணிமன்றம்  -  வாழிநடம் 
வாழி  அருட்சோதி  வாழிநட  ராயன் 
வாழி  சிவஞான  வழி. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com