
அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
மன்றொன்று வானை மகிழ்ந்து.
ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
என்றே எனக்குநினக் கும்.
கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையாள் கால்மலர்க்குக்
கைத்தலைமே லிட்டலையிற் கண்ர்கொண் - டுய்த்தலைமேல்
காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
காணாயே நெஞ்சே களித்து.
கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது.
அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
நலமே வதிலேநின் னாவூர் திருவம்
பலமேவக் காட்டும் பரிசு.
நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
அடிப்பாவை யும் வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
பூமி பொருந்து புரத்தே நமதுசிவ
காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
களித்தான் அவன்றான் களித்து.



