திருவருட்பா  86. நெஞ்சோடு நேர்தல் (தில்லையும் பார்வதிபுரமும்)

அன்னையப்பன்  மாவினத்தார்  ஆய்குழலார்  ஆசையினால் 
தென்னைஒப்ப  நீண்ட  சிறுநெஞ்சே  -  என்னைஎன்னை 
யாவகைசேர்  வாயில்  எயிற்றில்லை  என்கிலையோ 
ஆவகைஐந்  தாய்ப்பதம்ஆ  றார்ந்து. 
1
நீர்க்கிசைந்த  நாம  நிலைமூன்று  கொண்டபெயர் 
போர்க்கிசைந்த  தென்றறியாப்  புன்னெஞ்சே  -  நீர்க்கிசைந்தே 
ஒன்றுஒன்றுஒன்று  ஒன்றுஒன்றுஒன்று  ஒன்றுஒன்று  தில்லைமணி 
மன்றொன்று  வானை  மகிழ்ந்து. 
2
ஈற்றில்ஒன்றாய்  மற்றை  இயல்வருக்க  மாகியபேர் 
ஏற்ற  பறவை  இருமைக்கும்  -  சாற்றுவமை 
அன்றே  தலைமகட்கா  அம்பலவர்  தம்பால்ஏ(கு) 
என்றே  எனக்குநினக்  கும். 
3
கைத்தலைமே  லிட்டலையிற்  கண்ணுடையாள்  கால்மலர்க்குக் 
கைத்தலைமே  லிட்டலையிற்  கண்ர்கொண்  -  டுய்த்தலைமேல் 
காணாயேல்  உண்மைக்  கதிநிலையைக்  கைக்கணியாக் 
காணாயே  நெஞ்சே  களித்து. 
4
கல்லோ  மணலோ  கனியோ  கரும்போஎன்(று) 
எல்லோமும்  இங்கே  இருக்கின்றோம்  -  சொல்லோம் 
அதுவாய்  அதன்பொருளாய்  அப்பாலாய்  யார்க்கும் 
பொதுவாய்  நடிக்கின்ற  போது. 
5
அதுபார்  அதிலே  அடைந்துவதி  மற்றாங்(கு) 
அதில்ஏழை  யைப்புரமெய்  யன்பால்  -  அதிலே 
நலமே  வதிலேநின்  னாவூர்  திருவம் 
பலமேவக்  காட்டும்  பரிசு. 
6
நம்பார்  வதிபாக  னம்புரத்தில்  நின்றுவந்தோன் 
அம்பாரத்  தென்கிழக்கே  அம்பலத்தான்  -  வெம்பாது 
பார்த்தால்  அளிப்பான்  தெரியுஞ்  சிதம்பரம்நீ 
பார்த்தாய்இப்  பாட்டின்  பரிசு. 
7
நடிப்பார்  வதிதில்லை  நற்கோ  புரத்தின் 
அடிப்பாவை  யும்  வடக்கே  ஆர்ந்து  -  கொடிப்பாய 
நின்று  வளர்மலைபோல்  நெஞ்சேபார்த்  தால்தெரியும் 
இன்றெவ்விடத்  தென்னிலிப்பாட்  டில். 
8
பூமி  பொருந்து  புரத்தே  நமதுசிவ 
காமிதனை  வேட்டுக்  கலந்தமர்ந்தான்  -  நேமி 
அளித்தான்மால்  கண்மலருக்  கானந்தக்  கூத்தில் 
களித்தான்  அவன்றான்  களித்து. 
9
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com