திருவருட்பா  95. பேரருள் வாய்மையை வியத்தல்

நன்றே  தருந்திரு  நாடகம்  நாடொறும்  ஞானமணி 
மன்றே  விளங்கப்  புரிகின்ற  ஆனந்த  வார்கழலோய் 
இன்றே  அருட்பெருஞ்  சோதிதந்  தாண்டருள்  எய்துகணம் 
ஒன்றே  எனினும்  பொறேன்அரு  ளாணை  உரைத்தனனே. 
1
தற்சோதி  என்னுயிர்ச்  சத்திய  சோதி  தனித்தலைமைச் 
சிற்சோதி  மன்றொளிர்  தீபக  சோதிஎன்  சித்தத்துள்ளே 
நற்சோதி  ஞானநல்  நாடக  சோதி  நலம்புரிந்த 
பொற்சோதி  ஆனந்த  பூரண  சோதிஎம்  புண்ணியனே. 
2
திரைகண்ட  மாயைக்  கடல்கடந்  தேன்அருட்  சீர்விளங்கும் 
கரைகண்  டடைந்தனன்  அக்கரை  மேல்சர்க்  கரைகலந்த 
உரைகண்ட  தெள்ளமு  துண்டேன்  அருளொளி  ஓங்குகின்ற 
வரைகண்ட  தன்மிசை  உற்றேன்  உலகம்  மதித்திடவே. 
3
மனக்கேத  மாற்றிவெம்  மாயையை  நீக்கி  மலிந்தவினை 
தனக்கே  விடைகொடுத்  தாணவம்  தீர்த்தருள்  தண்ணமுதம் 
எனக்கே  மிகவும்  அளித்தருட்  சோதியும்  ஈந்தழியா 
இனக்கேண்மை  யுந்தந்தென்  உட்கலந்  தான்மன்றில்  என்னப்பனே. 
4
வாதித்த  மாயை  வினையா  ணவம்எனும்  வன்மலத்தைச் 
சேதித்தென்  உள்ளம்  திருக்கோயி  லாக்கொண்டு  சித்திஎலாம் 
போதித்  துடம்பையும்  பொன்னுடம்  பாக்கிநற்  புத்தமுதும் 
சாதித்  தருளிய  நின்னருட்  கியான்செயத்  தக்கதென்னே. 
5
செத்தார்  எழுகெனச்  சிந்தைசெய்  முன்னஞ்  சிரித்தெழவே 
இத்தா  ரணியில்  அருட்பெருஞ்  சோதி  எனக்களித்தாய் 
எத்தாலும்  என்றும்  அழியா  வடிவுதந்  தென்னுள்நின்னை 
வைத்தாய்  மணிமன்ற  வாணநின்  பேரருள்  வாய்மையென்னே. 
6
ஆக்கல்ஒன்  றோதொழில்  ஐந்தையும்  தந்திந்த  அண்டபிண்ட 
வீக்கம்எல்  லாம்சென்றுன்  இச்சையின்  வண்ணம்  விளங்குகநீ 
ஏக்கமு  றேல்என்  றுரைத்தருட்  சோதியும்  ஈந்தெனக்கே 
ஊக்கமெ  லாம்உற  உட்கலந்  தான்என்  உடையவனே. 
7
என்னேஎன்  மீதெம்  பெருமான்  கருணை  இருந்தவண்ணம் 
தன்னே  ரிலாத  அருட்பெருஞ்  சோதியைத்  தந்துலகுக் 
கன்னே  எனவிளை  யாடுக  என்றழி  யாதசெழும் 
பொன்னேர்  வடிவும்  அளித்தென்  னுயிரில்  புணர்ந்தனனே. 
8
அச்சோ  என்என்று  புகல்வேன்என்  ஆண்டவன்  அம்பலத்தான் 
எச்சோ  தனையும்  இயற்றாதென்  னுட்கலந்  தின்னருளாம் 
மெய்ச்சோதி  ஈந்தெனை  மேனிலைக்  கேற்றி  விரைந்துடம்பை 
இச்சோதி  ஆக்கிஅழியா  நலந்தந்த  விச்சையையே. 
9
வாழிஎன்  ஆண்டவன்  வாழிஎங்  கோன்அருள்  வாய்மைஎன்றும் 
வாழிஎம்  மான்புகழ்  வாழிஎன்  நாதன்  மலர்ப்பதங்கள் 
வாழிமெய்ச்  சுத்தசன்  மார்க்கப்  பெருநெறி  மாண்புகொண்டு 
வாழிஇவ்  வையமும்  வானமும்  மற்றவும்  வாழியவே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com