
சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே
அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.



