திருவருட்பா  94. அழிவுறா அருள்வடிவப் பேறு

சிவங்க  னிந்தசிற்  றம்பலத்  தருள்நடம்  செய்கின்ற  பெருவாழ்வே 
நவங்க  னிந்தமேல்  நிலைநடு  விளங்கிய  நண்பனே  அடியேன்றன் 
தவங்க  னிந்ததோர்  விண்ணப்பம்  திருச்செவி  தரித்தருள்  புரிந்தாயே 
பவங்க  னிந்தஇவ்  வடிவமே  அழிவுறாப்  பதிவடி  வாமாறே. 
1
விளங்கு  கின்றசிற்  றம்பலத்  தருள்நடம்  விளைக்கின்ற  பெருவாழ்வே 
களங்க  மில்லதோர்  உளநடு  விளங்கிய  கருத்தனே  அடியேன்நான் 
விளம்பி  நின்றதோர்  விண்ணப்பம்  திருச்செவி  வியந்தருள்  புரிந்தாயே 
உளங்கொள்  இவ்வடி  விம்மையே  மந்திர  ஒளிவடி  வாமாறே. 
2
விஞ்சு  கின்றசிற்  றம்பலத்  தருள்நடம்  விளைக்கின்ற  பெருவாழ்வே 
எஞ்சல்  அற்றமா  மறைமுடி  விளங்கிய  என்னுயிர்த்  துணையேநான் 
அஞ்சல்  இன்றியே  செய்தவிண்  ணப்பம்ஏற்  றகங்களித்  தளித்தாயே 
துஞ்சும்  இவ்வுடல்  அழிவுறா  தோங்குமெய்ச்  சுகவடி  வாமாறே. 
3
ஓங்கு  கின்றசிற்  றம்பலத்  தருள்நடம்  ஒளிர்கின்ற  பெருவாழ்வே 
தேங்கு  லாவிய  தெள்ளமு  தேபெருஞ்  செல்வமே  சிவமேநின் 
பாங்க  னேன்மொழி  விண்ணப்பம்  திருச்செவி  பதித்தருள்  புரிந்தாயே 
ஈங்கு  வீழுடல்  என்றும்வீ  ழாதொளிர்  இயல்வடி  வாமாறே. 
4
இலங்கு  கின்றசிற்  றம்பலத்  தருள்நடம்  இடுகின்ற  பெருவாழ்வே 
துலங்கு  பேரருட்  சோதியே  சோதியுள்  துலங்கிய  பொருளேஎன் 
புலங்கொள்  விண்ணப்பம்  திருச்செவிக்  கேற்றருள்  புரிந்தனை  இஞ்ஞான்றே 
அலங்கும்  இவ்வுடல்  எற்றையும்  அழிவுறா  அருள்வடி  வாமாறே. 
5
சிறந்த  பேரொளித்  திருச்சிற்றம்  பலத்திலே  திகழ்கின்ற  பெருவாழ்வே 
துறந்த  பேருளத்  தருட்பெருஞ்  சோதியே  சுகப்பெரு  நிலையேநான் 
மறந்தி  டாதுசெய்  விண்ணப்பம்  திருச்செவி  மடுத்தருள்  புரிந்தாயே 
பிறந்த  இவ்வுடல்  என்றும்இங்  கழிவுறாப்  பெருமைபெற்  றிடுமாறே. 
6
வயங்கு  கின்றசிற்  றம்பலந்  தன்னிலே  வளர்கின்ற  பெருவாழ்வே 
மயங்கு  றாதமெய்  அறிவிலே  விளங்கிய  மாமணி  விளக்கேஇங் 
கியங்கு  சிற்றடி  யேன்மொழி  விண்ணப்பம்  ஏற்றருள்  புரிந்தாயே 
தயங்கும்  இவ்வுடல்  எற்றையும்  அழிவுறாத்  தனிவடி  வாமாறே. 
7
தீட்டு  கின்றசிற்  றம்பலந்  தன்னிலே  திகழ்கின்ற  பெருவாழ்வே 
காட்டு  கின்றதோர்  கதிர்நடு  விளங்கிய  கடவுளே  அடியேன்நான் 
நீட்டி  நின்றதோர்  விண்ணப்பம்  திருச்செவி  நிறைத்தருள்  புரிந்தாயே 
பூட்டும்  இவ்வுடல்  எற்றையும்  அழிவுறாப்  பொன்வடி  வாமாறே. 
8
தடையி  லாதசிற்  றம்பலந்  தன்னிலே  தழைக்கின்ற  பெருவாழ்வே 
கடையி  லாப்பெருங்  கதிர்நடு  விளங்கும்ஓர்  கடவுளே  அடியேன்நான் 
இடைவு  றாதுசெய்  விண்ணப்பம்  திருச்செவிக்  கேற்றருள்  புரிந்தாயே 
புடையின்  இவ்வுடல்  எற்றையும்  அழிவுறாப்  பொன்வடி  வாமாறே. 
9
கையின்  நெல்லிபோல்  விளங்குசிற்  றம்பலங்  கலந்தருள்  பெருவாழ்வே 
மெய்யி  லேவிளைந்  தோங்கிய  போகமே  மெய்ப்பெரும்  பொருளேநான் 
ஐய  மற்றுரைத்  திட்டவிண்  ணப்பம்ஏற்  றளித்தனை  இஞ்ஞான்றே 
செய்யும்  இவ்வுடல்  என்றுமிங்  கழிவுறாச்  சிவவடி  வாமாறே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com