
சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
பேர்சான்ற இன்பம் பெரிது.
ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
பேறு மிகத்தான் பெரிது.
பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்
எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான
இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை
எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன்
செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற
இவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வெவ்
உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
இலகும் சிவமாய் இறையாய் - விலகும்
உருவாய் உருவில் உருவாய் உருவுள்
அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்
நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்
ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர
நாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும்
செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு
காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்
சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம்
பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
பெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத
போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா
ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற
சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்
ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான
சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்
அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்
அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும்
நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்
அஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப்
பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
தரமாய்ப் பரப்பிரமம் தானாய்-வரமாய
ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்
அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
சகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை
இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும்
நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்
எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற
வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்
தானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி
ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர்
ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்
பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி
வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்
நீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப்
பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
அரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய
வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி
கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்
நிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய
முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்
நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத
சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்
விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற
யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்
கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில்
காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்
சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்
செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்
உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள்
அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
கதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல்
ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்
பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற
ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்
சார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் - பார்வினையில்
ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்
சார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய
ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்
பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில்
தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா
ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்
என்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர்
அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி
வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை
நாடாது நான்கும் நசித்தவராய் - ஊடாக
எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்
அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல்



