
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண்.
வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
புதல்வாநின் தாளென் புகல்.
சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால்
நீடும் படிநீ நிகழ்த்து.
நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ
நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் - நினைப்பின்
மறப்பித்தாலி யானும் மறப்பேன் எவையும்
பிறப்பித்தாய் என்னாலென் பேசு.
உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
என்தாயே என்தந்தை யே.
வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
உண்டோ இலையோ உரை.
அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
சோதிஉரு வாக்குந் துணை.
பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
ஒளியாகி நின்ற உனை.
வந்தித்தேன் பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
வந்துசிந்திப் பித்தல் மறந்து.
தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
ஒண்பொரு உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
வண்பொருளும் ஈதல் மறந்து.
அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
எம்பெருமான் நீவாழ் இடம்.
பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொரு
பொன்வடிவம் கொள்ளாத போது.
பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில்
சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும்
கால்விரற்பால் நின்றொடுங்குங் கால்.
இன்றோ பகலோ இரவோ வருநாளில்
என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள்.
மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
பட்டால் வருமே பதம்.
தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
அடியார்குற் றேவலடி யன்.
உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
எந்தாயிங் கொன்றுமறி யேன்.
சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான்
என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே - மன்றகத்தோய்
அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை
அஞ்சேன் சிறிதும் அறிந்து.
எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்
சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச்
சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில்
எவருண் டெனைப்போல் இயம்பு.
உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
துண்ணப் பருக்கும் உடம்பு.
ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
கண்டே வலம்செய்யாக் கால்.
ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
கண்டுஞ் சிரங்குவியாக் கை.
வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
நீர்சிந்தா வன்கண் நிலை.
வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.
வீட்டார் இறைநீ விடைமேல் வரும்பவனி
காட்டா தடைத்த கதவன்றோ - நாட்டாதி
நல்லத் துளையா நதிச்சடையாய் என்னுஞ்சீர்ச்
செல்லத் துளையாச் செவி.
புல்லங் கணநீர்ப் புழையென்கோ புற்றென்கோ
சொல்லும் பசுமட் டுளையென்கோ - சொல்லுஞ்சீர்
வீயாத பிஞ்ஞகப்பேர் மெல்லினத்தின் நல்லிசைதான்
தோயாத நாசித் துளை.
தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ்
நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
மூளாது பாழ்த்த முகம்.
மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
தலக்கூடல் தாழாத் தலை.
கல்லென்கோ நீரடைக்குங் கல்லென்கோ கான்கொள்கருங்
கல்லென்கோ காழ்வயிரக் கல்லென்கோ - சொல்லென்கோ
இன்றா லெனிலோ எடுத்தாளெம் மீன்றாணேர்
நின்தாள் நினையாத நெஞ்சு.
சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
சும்மா அடைக்கின்ற சோறு.
சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
துண்ணுவார் உண்ணும் இடத்து.
ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
பாழ்மனையில் சென்றுண் பது.
வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில்
ஆங்கவரோ டுண்ணு மது.
கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில்
ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
வேண்டாதார் வீழ்ந்து விரைந்து.
கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க
எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில்
ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார்
போமிடத்திற் போவேன் புலர்ந்து.
அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்
வங்கணமே வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
றார்போ லழிக தளர்ந்து.
பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவா ராவ லுனை.
யாதோ கனற்கண் யமதூதர் காய்ச்சுகருந்
தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
நாட்டாதார் வாய்க்கு நலம்.
என்னெஞ்சோர் கோயில் எனக்கொண்டோய் நின்நினையார்
தன்னெஞ்சோ கல்லாமச் சாம்பிணத்தார் - வன்நெஞ்சில்
சார்ந்தவர்க்கும் மற்றவரைத் தானோக்கி வார்த்தைசொல
நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு.
வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
என்னென்ப தையா இயம்பு.
பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
எம்பரவை யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
மாயப்பெயர் நீண்ட மால்.
நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
அம்மையார் போனடந்தார் ஆர்.
வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட
வாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட
அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை
இங்கோதி வாழ்த்தாத யான்.



