திருவருட்பா  68. பிரிவாற்றாமை

தேடிய  துண்டு  நினதுரு  வுண்மை 
தெளிந்திடச்  சிறிதுநின்  னுடனே 
ஊடிய  துண்டு  பிறர்தமை  அடுத்தே 
உரைத்ததும்  உவந்ததும்  உண்டோ 
ஆடிய  பாதம்  அறியநான்  அறியேன் 
அம்பலத்  தரும்பெருஞ்  சோதி 
கூடிய  நின்னைப்  பிரிகிலேன்  பிரிவைக் 
கூறவுங்  கூசும்என்  நாவே. 
1
மடம்புரி  மனத்தாற்  கலங்கிய  துண்டு 
வள்ளலே  நின்திரு  வரவுக் 
கிடம்புரி  சிறியேன்  கலங்கினேன்  எனினும் 
இறையும்வே  றெண்ணிய  துண்டோ 
நடம்புரி  பாதம்  அறியநான்  அறியேன் 
நான்செயும்  வகையினி  நன்றே 
திடம்புரிந்  தருளிக்  காத்திடல்  வேண்டும் 
சிறிதும்  நான்  பொறுக்கலேன்  சிவனே. 
2
நீக்கிய  மனம்பின்  அடுத்தெனைக்  கலக்கி 
நின்றதே  அன்றிநின்  அளவில் 
நோக்கிய  நோக்கம்  பிறவிட  யத்தே 
நோக்கிய  திறையும்  இங்குண்டோ 
தூக்கிய  பாதம்  அறியநான்  அறியேன் 
துயரினிப்  பொறுக்கலேன்  சிறிதும் 
தேக்கிய  களிப்பில்  சிறப்பவந்  தென்னைத் 
தெளிவித்தல்  நின்கடன்  சிவனே. 
3
ஈன்றநற்  றாயுந்  தந்தையும்  குருவும் 
என்னுயிர்க்  கின்பமும்  பொதுவில் 
ஆன்றமெய்ப்  பொருளே  என்றிருக்  கின்றேன் 
அன்றிவே  றெண்ணிய  துண்டோ 
ஊன்றிய  பாதம்  அறியநான்  அறியேன் 
உறுகணிங்  காற்றலேன்  சிறிதும் 
தோன்றிஎன்  உளத்தே  மயக்கெலாந்  தவிர்த்துத் 
நன்றருள்  புரிவதுன்  கடனே. 
4
மாயையாற்  கலங்கி  வருந்திய  போதும் 
வள்ளல்உன்  தன்னையே  மதித்துன் 
சாயையாப்  பிறரைப்  பார்த்ததே  அல்லால் 
தலைவவே  றெண்ணிய  துண்டோ 
தூயபொற்  பாதம்  அறியநான்  அறியேன் 
துயர்இனிச்  சிறிதும்இங்  காற்றேன் 
நாயகா  எனது  மயக்கெலாம்  தவிர்த்தே 
நன்றருள்  புரிவதுன்  கடனே. 
5
வண்ணம்  வேறெனினும்  வடிவுவே  றெனினும் 
மன்னிய  உண்மை  ஒன்றென்றே 
எண்ணிய  தல்லால்  சச்சிதா  னந்தத் 
திறையும்வே  றெண்ணிய  துண்டோ 
அண்ணல்நின்  பாதம்  அறியநான்  அறியேன் 
அஞர்இனிச்  சிறிதும்இங்  காற்றேன் 
திண்ணமே  நின்மேல்  ஆணைஎன்  தன்னைத் 
தெளிவித்துக்  காப்பதுன்  கடனே. 
6
ஊடல்செய்  மதமும்  சமயமும்  இவற்றில் 
உற்றகற்  பனைகளும்  தவிர்ந்தேன் 
வாடல்செய்  மனத்தால்  கலங்கினேன்  எனினும் 
மன்றினை  மறந்ததிங்  குண்டோ 
ஆடல்செய்  பாதம்  அறியநான்  அறியேன் 
ஐயவோ  சிறிதும்இங்  காற்றேன் 
பாடல்செய்  கின்றேன்  படிக்கின்றேன்  எனக்குப் 
பரிந்தருள்  புரிவதுன்  கடனே. 
7
உள்ளதே  உள்ள  திரண்டிலை  எல்லாம் 
ஒருசிவ  மயமென  உணர்ந்தேன் 
கள்ளநேர்  மனத்தால்  கலங்கினேன்  எனினும் 
கருத்தயல்  கருதிய  துண்டோ 
வள்ளலுன்  பாதம்  அறியநான்  அறியேன் 
மயக்கினிச்  சிறிதும்இங்  காற்றேன் 
தெள்ளமு  தருளி  மயக்கெலாம்  தவிர்த்தே 
தெளிவித்தல்  நின்கடன்  சிவனே. 
8
எம்மத  நிலையும்  நின்னருள்  நிலையில் 
இலங்குதல்  அறிந்தனன்  எல்லாம் 
சம்மதம்  ஆக்கிக்  கொள்கின்றேன்  அல்லால் 
தனித்துவே  றெண்ணிய  துண்டோ 
செம்மலுன்  பாதம்  அறியநான்  அறியேன் 
சிறிதும்இங்  கினித்துயர்  ஆற்றேன் 
இம்மதிக்  கடியேன்  குறித்தவா  றுள்ள 
தியற்றுவ  துன்கடன்  எந்தாய். 
9
அகம்புறம்  மற்றை  அகப்புறம்  புறத்தே 
அடுத்திடும்  புறப்புறம்  நான்கில் 
இகந்ததும்  இலைஓர்  ஏகதே  சத்தால் 
இறையும்இங்  கெண்ணிய  துண்டோ 
உகந்தநின்  பாதம்  அறியநான்  அறியேன் 
உறுகணிங்  கினிச்சிறி  துந்தான் 
இகம்பெறல்  ஆற்றேன்  மயக்கெலாம்  தவிர்த்திங் 
கென்னைஆண்  டருள்வ  துன்கடனே. 
10
reloadlight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com